வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது இராமர் சிலை கண்டெடுப்பு!
க.பாலகுரு,
பெருமாளகரம் பகுதியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது பல லட்சம் மதிப்பிலான 2 அடி உயரம் உடைய இராமர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் பகுதியில் தொன்மை சிறப்பு வாய்ந்த பெருமாள் ஆலயம் இன்று இருந்து வருகிறது. இவ்வாலயத்தின் அருகே மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடுகட்டுவதற்காக 4 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது அந்த பள்ளத்தில் 2 அடி உயரம் கொண்ட சிலை ஒன்று மண்ணில் புதைந்து இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து சிலை மேலே கொண்டுவரப்பட்டது. மேலும் இச்சிலையானது ஐம்பொன்னாலான இராமர் சிலை என்பதும், இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் தொல்லியல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் தொல்லியல் துறை ஆய்வுக்கு பின்னர் இராமர் சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதும், அதன் முழுமையான மதிப்பு தெரியவரும்.
இதனிடையே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இராமர் சிலை கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளம் தோண்டியபோது உலோகத்தால் ஆன 10 வகையான ஆலயத்திற்கு உரிய பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.