இந்தியா கூட்டணியும் - அதிமுகவும் நடத்திய பந்த் போராட்டத்தில் தடியடி!
டி.இ.முகமது,
புதுச்சேரியில் சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது, கஞ்சா போதையில் இருந்த சிலரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், போதை பொருளை புழக்கத்தை தடுக்கதவறிய அரசை கண்டித்தும், இந்தியா கூட்டணியும் - அதிமுகவும் பந்த் அறிவித்தது. இதில் திருநங்கைகளும் பங்கேற்ற நிலையில் போலிசார் தடியடி நடத்தினர்.
தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கிய நிலையிலும் அவை இருமாநில எல்லையான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு வரையிலும் வந்து திரும்பின. பிரதான கடை வீதிகளான நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின.
முழு அடைப்பையொட்டி புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் 10 மணியளவில் ஒன்று திரண்ட இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், திருநங்கைகள் என 400க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு நேருவீதி வழியாக கிழக்கு எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
அப்போது நேருவீதி மிஷன் வீதி சந்திப்பில் போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். உடனே போராட்டக்காரர்கள் மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இருப்பினும் மகளிரணியினர், போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகை அருகிலுள்ள தடுப்புகளை மீறி கவர்னர் மாளிகை நுழைவு வாயில் பகுதிக்கு சென்றனர்.
பின்னர் போராட்டத்தை கைவிட மறுத்த எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் முழு அடைப்பு நடைபெற்றாலும் அரசு அறிவித்திருந்தபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது.