போலிஸ்காரர் தற்கொலை முயற்சி:- ஆன்லைன் ரம்மியில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீதம்!

சபரீ.ஈஸ்வரன்,
போலிஸ்காரர் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். ஆன்லை ரம்மியில் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம், பழவூர் அருகே உள்ள மாடன் பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் ரவி செல்வன் (வயது 40). இவர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு என்று கூறப்படுகிறது.
இதனால் ரவி செல்வன் சரிவர வேலைக்கு செல்லாமல் அக்கம் பக்கத்தினரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன் லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
ஆன் லைன்ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இவர் வாழ்வில் வெறுப்படைந்து நேற்று மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிக் கிடந்த ரவி செல்வன் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழப்பதோடு, பலரின் உயிர் பறி போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக லட்சக்கணக்கில் கடனாளியாகி கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் இளம்பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் போலீஸ் ஏட்டு ஒருவர் லட்சக்கணக்கில் கடனாளியாகி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.