அன்புமணியின் மனைவி சௌமியா தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்! ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டார்!

டி.இ.முகமது,
அன்புமணியின் மனைவி முனைவர்.சௌமியாவுக்கு தர்மபுரி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொகுதிக்கு ஏற்கனவே தர்மபுரி மாவட்ட தலைவர் அரசாங்கம் என்பவரை பாமக அறிவித்திருந்த நிலையில் அவர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சௌமியாவை நிறுத்தி இருக்கிறார்கள்.
சௌமியா அவர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால் அவர் ஆரணி தொகுதியில் போட்டியிட கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தர்மபுரி தொகுதி அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
சௌமியா ஏற்கனவே அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராவார். அவரது தந்தை கிருஷ்ணசாமி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அவர் எம்பி உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.
சௌமியாவின் சகோதரர் டாக்டர்.விஷ்ணு பிரசாத் செய்யார் எம்எல்ஏவாகவும் ஆரணி எம்பி ஆகவும் இருந்துள்ளார் என்பது நினைவு கூற தக்கதாகும்.
மேலும் சௌமியா பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். இதன் மூலம் பல்வேறு பசுமைப் புரட்சி பணிகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார்.
அப்படி இருக்க அவர்தான் தர்மபுரி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் தர்மபுரி பாமகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்