தமிழகத்தில் தொகுதிக்கே சம்மந்தமில்லாத பாஜக வேட்பாளர்கள்!

 தமிழகத்தில் தொகுதிக்கே சம்மந்தமில்லாத பாஜக வேட்பாளர்கள்!

உ.சசிகுமார்,

 தமிழகத்தில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க., த.மா.க.உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஏனைய தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பலர் மாற்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் அடக்கம்.

 ஏற்கனவே திருச்சி தொகுதி, பேராசிரியர் ராம.சீனிவாசனுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியானவுடன், வேடந்தாங்கல் பறவைகள் என்று கூறி அவரை திருச்சி வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்றும், அப்படி நிறுத்தினால் அவருக்கு எதிராக தேர்தல் வேலை செய்வேன் என்று பாஜக வைச் சேர்ந்த சூர்யா எக்ஸ் தளத்தில் அவரது எதிர்ப்பை பதிவிட்டார்.

 இந்நிலையில் முன்னாள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வி.பாலகணபதி திருவள்ளூர் தொகுதியிலும், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியிலும், கோவையை சேர்ந்த பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 அதே போல் கரூரை சேர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

திருப்பூரை சேர்ந்த எல்.முருகன், நிலகிரி தொகுதியிலும், விழுப்புரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமன், திருவண்ணாமலையிலும், சென்னை தி.நகரைச் சேர்ந்த தேவநாதன், சிவகங்கையிலும், வேலூரைச் சேர்ந்த கார்த்தியாயினி சிதம்பரத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

 ஆக தொகுதிக்கே சம்பந்தமில்லாதவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தந்த தொகுதியில் பாஜக சார்பில் கட்சிப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் எவருக்கேனும் வாய்ப்பு வழங்கியிருக்கலாமே என்று கட்சிக்குள் முனகிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்நிலையில் தான் பலரும் தொகுதி மாறி நிற்கின்றனா, இதை எல்லாம் திருச்சி சூர்யா சுட்டிக் காட்டமாட்டாரா என்று பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.