பூவை ஜெகன் மூர்த்தியை கழற்றிவிடும் அதிமுக! பாஜகவுக்கு ரூட்டா?

பூவை ஜெகன் மூர்த்தியை கழற்றிவிடும் அதிமுக! பாஜகவுக்கு ரூட்டா?

  ஜி.சாந்தகுமார்,

  புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி,  வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். அதிமுகவுடன் கூட்டணி ரீதியாக நட்பு வைத்துக்கொண்டிருந்த அவர் நாடாளுமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடந்தார்.

 ஆகவே சீட்டு கூட கேட்டிருக்கிறார். ஆனால் அதிமுக என்ன நினைத்ததோ தெரியவில்லை, புரட்சி பாரதத்துக்கு சீட்டு ஒதுக்கவில்லை.

 இதனால் வெறுப்படைந்த புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் ஜெகன் மூர்த்தியிடம் புலம்பியிருக்கிறார்கள். எனவே பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள பூவை மு.மூர்த்தியார் திடலில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவுடனான கூட்டணியில் இடம் ஒதுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

  பின்னர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்காதது குறித்து நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே அதிமுகவுடனான கூட்டணி மேலும் தொடருமா என்பது குறித்து இரண்டொரு நாளில் முடிவு அறிவிக்கப்படும்.  

 புரட்சி பாரதம் கட்சி சார்பில் தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை. மேலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமையுமா என கேட்டதற்கு நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

  ஆகவே அதிமுகவின் நடவடிக்கையால் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பாஜகவுக்கு ரூட் எடுத்து வருகிறார்கள்.