ஆ.ராசா...கனிமொழி மீதான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு! உளவியல் பாதிப்பா? விடுதலையன்று வேதனைப்பட்ட நீதிபதி!

ம.பா.கெஜராஜ்,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணை வரும் மே மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் இந்த வழக்கில் இருந்து ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பலர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் 2 வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிவு செய்தன. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனிவிசாரித்து, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து கடந்த 2017 டிசம்பரில் தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய இந்த தீர்ப்பில் உள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதா என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட ஓ.பி. சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு தவறிவிட்டது என்று தெரிவித்தார்.
பிரதான வழக்கான 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆன நிலையில், மற்றொரு வழக்கான தனியார் டி.வி.க்கு ரூ.200 கோடி பெறப்பட்டதா என்ற கேள்வி எழவில்லை என்றும் நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் தொடக்கம் மற்றும் தோற்றம் ஆ. ராசாவின் செயல்பாடுகளில் இல்லை, ஆனால், மற்றவர்களின் செயல்பாடு அல்லது செயலின்மையால் தான் நடந்தது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த உடனடி வழக்கில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டத்தின் மொத்த உருவமாக ராசா திகழ்ந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சதித்திட்டத்தில், தவறில் அல்லது ஊழலில் ராசாவுக்கு எந்த தொடர்பும் இருந்ததாக ஆதாரம் இல்லை என்றும் சைனி குறிப்பிட்டார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கட்டணத்தை மாற்ற நிதிச்செயலாளர் மற்றும் டிராய் அமைப்பு பரிந்துரை செய்ததாக அரசு தனது குற்றப்பத்திரிகையில் கொடுத்த தகவல் தவறானது என்றும், அரசு ஆவணங்களை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதி ஓ.பி. சைனி குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மத்திய அரசின் அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கைகளில், தெளிவில்லாததுதான், வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
குற்றச்செயலால் ஈட்டியதான வருமானம் ஏதும் இல்லாதபோது குற்றம் இருக்கமுடியாது. எனவே இந்த வழக்கின் அடிப்படையே இல்லாமல் போனதாகவும், சாட்டப்பட்ட குற்றம் இல்லாமல் போவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்முறையீடு தாக்கல் செய்யப்படுவதற்கான நேரம் முடிந்தவுடன், அமலாக்கத் துறையால் இணைக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் தவறானவை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நன்கு ஜோடிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க வழக்கு தொடர்ந்தவர்கள் தவறிவிட்டனர் எனக் கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நீதிபதி ஓ.பி.சைனி வேதனை
கடந்த ஏழு வருடங்களாக, எல்லா வேலை நாள்களிலும், கோடை விடுமுறை நாள்களிலும் தாம் நீதிமன்றத்திலேயே காலை 10 முதல் மாலை 5 வரை யாராவது சட்டரீதியாக ஏற்கத்தக்க ஆதாரங்களோடு வருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்ததாகத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சைனி, புரளியாலும், கிசுகிசுக்களாலும், ஊகத்தாலும் உருவான பொதுக்கருத்தின்வழி யாவரும் சென்றதாகவும் குறிப்பிட்டார். பொதுக் கருத்துக்கு நீதித்துறை நடைமுறையில் இடமில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தான், இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 மார்ச் மாதத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்கெனவே 6 நீதிபதிகள் விசாரித்துள்ளனர்.
அப்படியிருக்க 7-வது நீதிபதியாக தினேஷ்குமார் சர்மா விசாரித்தார். அப்போது, இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது தொடர்பான தீர்ப்பை அவர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில்,ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
மேலும் வழக்கு விசாரணை வரும் மே மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்த பின்னர் தான்மிந்த வழக்கின் விசாரணை தொடங்கவிருக்கிறது என்றாலும் கூட, இது பிரச்சாரத்துக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது கேள்வியே?