ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் எம்.பி.யாக வெற்றி பெற்றது செல்லாது என சென்னைன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது, அதே நேரத்தில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறது.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.