இன்ஸ்பெக்டர் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை ஏமாற்றிய ஐ.எஃப்.எஸ்:- நிறுவனர் உறவினர்கள் வீடுகளில் அமலாக்க துறையினர் ரைடு!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் ஐ.எஃப்.எஸ் என்கிற இன்டர் நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் என்கிற நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தினர். மேலும் வங்கி பண பரிவர்த்தனைகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த நிதி நிறுவனத்தில் அதிகவட்டி கொடுக்கப்பட்டு வந்ததால் காவல் துறையை சேர்ந்த பெரிய அதிகாரிகளும் நீதிபதியின் கணவன் என சிலரும் அதில் முதலீடு செய்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இந்நிதி நிறுவனத்தின் நிறுவனர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகர் கிழக்கு பகுதியில் தலைமை அலுவலகம் வைத்து ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த அந்த நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை வசூல் செய்ததுடன் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டியாக பணம் தருவதாக அறிவிப்பு கொடுத்தனர்.
அந்த ஆசையில் பல போலிஸ் அதிகாரிகளும், நீதிபதியின் கணவன் உள்ளிட்டவர்கள் முதலீடு செய்து வட்டி பெற்றிருக்கிறார்கள். பின்னர் சொற்ப காலம் வரை வட்டி பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தி போக்கு காட்டியது.
இது தொடர்பாக பிரபல புலனாய்வு இதழ் ஒன்று சிறப்புகட்டுரை வெளியிட்டு மக்களுக்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த கட்டுரையை தொகுத்து எழுதியமைக்காக இளம் நிருபரை மிரட்டிய அப்போதைய விருதம்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கையில் சிக்கினார்.
பின்னர் இது குறித்து வெளியான தகவல்கள் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றதால் அவர்கள் விசாரணையில் இறங்கினர்.
அப்போது வட மாவட்டங்களில் ஐ.எப்.எஸ். நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6,000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. எனவே மேட்டர் சீரியசானது. இதை உணர்ந்த ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் முக்கிய ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம், கார்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலாரில் உள்ள ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீட்டிற்கு காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர். ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் இருந்து பல கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறை சோதனையால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதே போல் செங்குட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
நெமிலியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த சம்பவத்தால் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்படி நிறுவனத்தில் அரசு பணியில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் முதலீடு செய்து பணத்தை டெபாசிட் செய்ததுடன், பல ஆண்டுகள் வட்டி பெற்று கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார்கள். இதெல்லாம் இந்த சோதனையில் வெளியாகிவிடுமோ என்று அந்த தரப்பினர் அஞ்சுவதுடன், இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களை எந்த பின்புலம் முன்னின்று வெளிநாடுகளுக்கு வழி அனுப்பிவைத்தது என்பதும் தெரிய வரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.