வழக்குகாக நீதிமன்றம் வந்த ரவுடி வெட்டி கொலை! 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசி வெறிச்செயல்!

ம.பா.கெஜராஜ்
பட்டபகலில்,நீதிமன்றத்தின் அருகில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ், இவர் மீது தாம்பரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது உள்ள வழக்கு ஒன்றுக்காக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த லோகேசை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளனர்.
செங்கல்பட்டு கோர்ட்டு அருகில் 'ஜூஸ் கோர்ட்' என்ற பெயரில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் இன்று காலை 10.30 மணி அளவில் கோர்ட்டுக்கு வந்திருப்பவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என பலர் குளிர்பானங்களை வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த லோகேசை குறிவைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
லோகேஷ் மீது சராமரியாக நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் வாலிபர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அப்போது மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கொலை வெறியுடன் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே விழுந்து கிடந்த லோகேசை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஜூஸ் கடை உடனடியாக மூடப்பட்டது.
வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இன்னொரு வாலிபரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த வாலிபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கொலையுண்ட லோகேஷ் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது 2 கொலை வழக்குகளும், 4 வழிப்பறி வழக்குகளும் உள்ளன.
2015 ஆம் ஆண்டு இரும்புலியூரில் கொலை வழக்கில் 2 வது முக்கிய குற்றவாளி லோகேஷ். முதல் குற்றவாளியான பாஸ்கரை ஏற்கனவே கொலை செய்திருந்த நிலையில் இரண்டாது குற்றவாளியான லோகேசை பழிக்கு பழி வாங்கும் வகையில் அவரது எதிரிகள் கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டி இருப்பதாக முதற்கட்டமாக போலிசார் சொன்னார்கள்.
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த லோகேஷை ஃபாலோ செய்து தீர்த்துக்கட்ட்டியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலே கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு டி.எஸ்.பி. பரத், டவுன் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற பணி நேரம் என்பதால் வழகறிஞர்கள், வழக்குக்காக வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.