கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! உண்மை காரணம் என்ன?

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
கடந்த ஜனவரி மாதம் கோவை டி.ஐ.ஜி .யாக பொறுப்பேற்றவர் சி.விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று காவல் பணியில் இணைந்தார். சீனியர் ஐ.பி.எஸ்.அதிகாரியான அவர் காஞ்சிபுரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.
அடுத்ததாக சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தந்தை விஏஓ வாகவும், தாய் ஆசிரியராகவும் பணியாற்றியவர்கள்.
இவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு பந்தய சாலையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அப்பொழுது திடீரென அவரது அலுவலக கன்மேன் ரவி என்பவரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையை நேரில் கவனிக்க காவல் துறை கூடுதல் இயக்குநர் அருண் இ.கா.ப. அவர்கள் கோவை விரைந்தார்.
இந்நிலையில் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கிற உண்மை குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அநேகமாக பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகும் என்கிறார்கள், பார்க்கலாம்.
ஆனால் அவர் கடந்த ஒரு மாத காலமாகவே தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து வந்ததுடன், அவரது மனைவியையும், மகளையும் வரவழைத்து உடன் இருந்தார்கள் எனவும் முதற்கட்டமாக தெரிந்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரு காவல் அதிகாரியை அழைத்த விஜயகுமார் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி எப்படி சமாதானம் செய்தார் என்கிற தகவல் தற்போதைக்கு கிடைக்கவில்லை.
அதே போல் நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார்,தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அவரது உடன் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியான டிஐஜியே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தையும் தாண்டி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஒரு நல்ல அதிகாரியை தமிழ்நாடு காவல் துறை இழந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
புகைப்படம் திருத்தம் கே.ஏ.ஜெகதீஸ்வரி,