பாஜகவுடன் உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ்!

பாஜகவுடன் உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ்!

 ஜி.சாந்தகுமார்,

 ஓ. பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை, எப்போதுமே பா.ஜ.க. கூட்டணியை விரும்பி வந்தது. எல்லா பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது என்றே சொல்வார். ஈரோடு இடைத்தேர்தலின்போதுகூட தானே கமலாலயத்திற்கு வலியச் சென்று ஆதரவளித்தார் ஓ. பன்னீர்செல்வம்.

   நீண்ட காலமாகவே எடப்பாடி கே. பழனிச்சாமி - ஓ. பன்னீர்செல்வம் இரு தரப்பினரையும் ஒன்றாகவே நடத்தி வந்த பா.ஜ.க. தலைமை, ஒரு கட்டத்திற்குப் பிறகு முழுமையாக எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டது.

குறிப்பாக, ஜூலை 18ஆம் தேதி தில்லியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தபோது, தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க.வின் சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதோடு, அவர் பிரதமர் நரேந்திர மோதியின் அருகிலும் அமர வைக்கப்பட்டார்.

  இதில் அதிர்ந்துபோன ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் துவக்க விழாவிற்குச் செல்லாமல் புறக்கணித்தார்.

   இதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி, வெளிப்படையாகவே பா.ஜ.கவைத் தாக்கிப் பேட்டியளித்தார். செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அமைதி காத்து வந்தது.

  ஆனால், தற்போது பிரதமரைச் சந்தித்தன் மூலம் மீண்டும் அந்த உறவைப் புதுப்பித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.