700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஓட்டமோ ஓட்டம்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை ஓட்டத்தில் 700க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு 5 வது சைகை அணி சார்பில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 147 வது பிறந்த நாளை ஒற்றுமை தினமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.
முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் தேசிய மாணவர் படையை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நடந்த தொடர் ஓட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
கல்லூரி எதிரே இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக ஓடி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.