அரசு பள்ளிக்கூடம் கட்ட ரூ.25 லட்சம் செலவில் இடம் வாங்கி கொடுத்த ஒப்பந்ததாரர்!

அரசு பள்ளிக்கூடம் கட்ட ரூ.25 லட்சம் செலவில் இடம் வாங்கி கொடுத்த ஒப்பந்ததாரர்!

 ஜி.கே.சேகரன்,

   வாடகை கட்டிடம், இட நெருக்கடி...என்கிற சூழலில் இயங்கிய வந்த உருது பள்ளிக்கு, தனி நபர் ஒருவர் ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை சொந்த பணத்தில் வாங்கி அரசுக்கு தானமாக அளித்தார்.

 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குடும்ப சூழ்நிலை காரணமாக 8 ஆம் வகுப்பு வரை படித்து பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தினார். சிறு சிறு கூலி வேலை செய்து படிப்படியாக முன்னேறி இன்று கட்டுமான பணியினை செய்து கொண்டிருக்கிறார்.

  ஏழ்மையினால் இவர் படிக்க இயலவில்லை என்றாலும், ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைத்திட சேவை செய்து வரும் இவர், பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியில் உள்ள அரசு உருது தொடக்கப்பள்ளிக்கு சொந்த இடம் வாங்கி தானமாக வழங்க திட்டமிட்டிருந்தார்.

  ஏனெனில், அந்த பள்ளி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாள் வரை பள்ளிக்கு சொந்த இடம் இல்லாமல் ஒரு சிறிய 800 சதுர அடி கொண்ட வாடகை வீட்டில்  இயங்கி வந்தது.

   இந்நிலையில், இம்ரான் வேறு ஒரு நபரிடம் இருந்து ரூபாய் 25  லட்சத்துக்கு¢ 4000சதுர அடி கொண்ட காலி மனையினை வாங்கி பின்னர் அதனை தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

  மேலும் அவர் இடப்பற்றாக்குறை ஏதும் இருப்பின் அருகில் உள்ள காலிடத்தையும் வாங்கித் தருகிறேன் என்று கூறி இருக்கிறார். இவருக்கு  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிமொழி, பாராட்டுகளை தெரிவித்தார்.

  சாதாரணமாக கவுன்சிலர்களாக இருப்பவர்களே அரசு இடங்களை ஆட்டையை போட்டு வருகிறார்கள். அதிலும் பேர்னாம்பட்டில் சொல்லவே தேவையில்லை. அப்படியிருக்க அரசு பள்ளிக்கூடத்துக்கு சொந்த பணத்தில் இடம் பெற்று கொடுத்திருக்கும் இம்ரானை நாமும் மனதார பாராட்டலாமே.