மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் உதயநிதி! விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கான ஆட்சி என பேச்சு!

மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் உதயநிதி! விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கான ஆட்சி என பேச்சு!

ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் கலைஞர் நூற்றாண்டு விழா அரசு நலத்திட்ட உதவிகள் தங்கும் விழாவில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்கினார்

   திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் கலைஞர் நூற்றாண்டு விழா அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.  இதில்  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். சூரியகுமார், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, மற்றும் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில்  வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஊரக வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் திருவாரூர் நலத்துறை, சமூக நலத்துறை தாட்கோ வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பில் 14253 பேருக்கு 73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  விழாவில் அமைச்சர் உதயநிதி காக்கனாம்பாளையம், காவேரிப்பட்டு, ஆத்தூர்குப்பம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான பணியை துவங்கி வைத்தார்.

  பின்னர் அவர் பேசுகையில் தாமதமாக வந்ததால் அனைவரிடமும் மன்னிப்பு கோரினார். ஆட்சி அமைத்து 26 மாதங்களில் 260 க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார். திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது தான். விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் அனைவருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

   திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. விவசாயிகளுக்கு 38. கோடி மதிப்பீட்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏலகிரி மலையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் மூலமாக இதுவரையில் 130175 பேர் பயன் அடைந்துள்ளனர்.

   இல்லம் தேடி கல்வி வழங்கப்படுகிறது, கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்  வணியம்பாடி தொகுதி மாற்று கட்சியாக இருந்தாலும் அவர்களும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விளையாட்டு திடல் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

  செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை வழங்கப்படும். நாட்றம்பள்ளியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக முதல்வரிடம் பேசி விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.