அத்து மீறி தேவாலயத்துக்குள் நுழைந்த மன்சூர் அலிகான்! வாக்கு சேகரிப்பு நோட்டிசுடன் வந்ததால் பரபரப்பு!
ஜி.கே.சேகரன்,
நடிகர் மன்சூர் அலிகான்,வாக்கு சேகரிப்பு நோட்டிசுடன் அத்து மீறி தேவாலயத்துக்குள் நுழைந்தார்.
வேலூர் மக்களவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் திணுசு திணுசாக பிரச்சாரம் செய்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
அப்படியிருக்க, ஈஸ்டர் தினமான இன்று வேலூரின் மையப்பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஆயிரகணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியோடு பங்கேற்றிருந்தனர். அப்போது மன்சூர் அலிகான் அவருடன் சிலரை அழைத்துக்குக் கொண்டு அத்துமீறி தேவாலயத்துக்குள் நுழைந்தார். அவருடன் வந்த நபர்கள் வாக்கு சேகரிப்புக்கான நோட்டிஸை எடுத்து வந்திருந்தனர்.
உள் நுழைவு வாயிலின் படிகட்டில் சிறிது நேரம் அமர்ந்து பைபில் வாசிப்பது போல் போஸ் கொடுத்தார். அப்போது
பாதுகாவலர் ஆட்சேபனை தெரிவிக்கவே அங்கிருந்து வெளியேறிய அவர் ஆலயத்தின் வெளியே பலூன் விற்றுக் கொண்டிருந்தவரிடமிருந்து கைபம்பை வாங்கி பலூனுக்கு காற்றடித்தும், தமக்கு வழங்கப்பட்ட சின்னமான பலாப்பழத்தை தலையில் வைத்தும் தமாஷ் செய்துக்கொண்டிருந்தார்.
ஸ்கூட்டரில் அமர்ந்தவாறு பலாப்பழம் வாங்கலையோ பலப்பாழம், விறகு வாங்கலையோ விறகு என்று அட்ராசிட்டி செய்தார்.
அதே போல் ஒரு கைக்குழந்தையை அலேக்காக தூக்கி அதிரடி காட்டினார்.
பின்னர், தேவாலயத்தின் வெளியே நிற்கவைக்கப்பட்டிருந்த அவரது பிரச்சார வேனில் ஏறிக்கொண்டு "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும் என்றார், இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்" என்று இயேசு நாதரின் பாடலை மனப்பாடமாக பாடி வாக்கு சேகரித்தார்.
இவரது செயல்களை பார்க்க அங்கு கூட்டம் கூடியது.