ரூம் போட்டு யோசிப்பாங்களோ? காரிதுப்பும் போராட்டத்தை அறிவித்திருக்கும் கருத்தாய்வு குழு!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? காரிதுப்பும் போராட்டத்தை அறிவித்திருக்கும் கருத்தாய்வு குழு!

ம.பா.கெஜராஜ்,

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு சொந்தமான பங்களா குளத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 53 லட்சம் நிதி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளில் நடந்துவரும் முறைகேடுகளை கண்டித்து நுதனமான போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டை கருத்தாய்வு குழு என்கிற அமைப்பு அறிவித்து அதற்கான நோட்டிஸை விநியோகித்து வருகிறார்கள்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

காரி துப்பும் போராட்டம்

நாள்: 03.04.2024, புதன்கிழமை

இடம்: அரசு தேர்வு செய்யும் இடத்தில்

வாஸ்து படி காரி துப்பும் முறைகள்:

மின்கம்பத்தை நடுவில் வைத்து நடைபாதை அமைக்க புதுமையான திட்ட அறிக்கையை தயார் செய்த பொறியாளரை நினைத்து வருந்தி கிழக்கு புறமாக திரும்பி 3 முறை காரி துப்பப்படும்.

பங்களா குளம் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை விரிவுப்படுத்த நிர்வாகத் திறனற்ற பேரூராட்சி செயல் அலுவலரை நினைத்து மேற்கு புறமாக திரும்பி 5 முறை காரி துப்பப்படும்.

53 லட்சம் நிதி மதிப்பீட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணியை கண்காணிக்காமல் கவரை வாங்கிக் கொண்டு கையெழுத்தை மட்டும் போடும் ஆலங்குடி உதவி பொறியாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளரை நினைத்து வருந்தி வடக்கு புறமாக திரும்பி 9 முறை காரி துப்பப்படும்.

பங்களா குளத்திற்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால்களையும், குளம் நிரம்பி நீர் வெளியேறும் வடிகால் வாய்க்கால்களையும் ஆரம்பகால அளவுகளின்படி புனரமைத்து பாதுகாக்காத பேரூராட்சி நிர்வாகத்தை நினைத்து வருந்தி தெற்கு புறமாக திரும்பி 12 முறை காரி துப்பப்படும்.

குறிப்பு: எங்களோடு இணைந்து யாரேனும் இந்த சீர்கேட்டை காரி துப்பவிரும்பினால்,மருத்துவமனையை போல் செயல்படும் கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் காசநோய், சளி பரிசோதனைகளை செய்துவிட்டு எங்களோடு இணைந்து கொள்ளலாம்.

இதற்கு துரை கருணா என்பவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.