பன்னீரை கண்கலங்க வைத்த பா.ஜ.க.! இனிப்பு கொடுத்து வாக்காளர்கள் கவனிப்பு!

பன்னீரை கண்கலங்க வைத்த பா.ஜ.க.! இனிப்பு கொடுத்து வாக்காளர்கள் கவனிப்பு!

 ம.பா.கெஜராஜ்,

   முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களை பா.ஜ.க.வின் “கீ” கண்கலங்க வைத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றின விவரம் வருமாறு,

   ஈரோடு கிழக்கு சட்ட்டபேரவை தொகுதியில் போட்டியிடவும்,  'இரட்டை இலை சின்னத்துக்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது' என ஓ.பன்னீர் செல்வத்தை கீ கொடுத்து முடுக்கிவிட்டதே பா.ஜ.க.தான்.

 அதை நம்பிய அவரும் சந்திப்புகளையும், பேட்டிகளையும்  கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், இரட்டை இலைசின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கச் சொல்லி பன்னீருக்கு பா.ஜ.க. தீர்ப்பை மாற்றி எழுதியது.

 இதற்கு அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே வேறு வழியில்லாமல் பன்னீரும் இறங்கிவிட்டார்.

 இதற்காக பன்னீரை சந்தித்த பா.ஜ.க. டீம் படே குஷியாக திரும்பினர்.

 ஆனால் இந்த ஜம்பம் எடப்பாடியிடம் பலிக்கவில்லை.

 ஆம், பிப்ரவரி 3-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு டெல்லியிலிருந்து அவசரமாக சென்னைக்கு வந்த அண்ணாமலை, காலை 7 மணிக்கெல்லாம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடியின் வீட்டுக்கு மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சென்றானர்.

 அப்போது அண்ணாமலை எடப்பாடியிடம், 'நீங்களும் பன்னீர் அண்ணாவும் பிரிந்திருப்பதால்தான் இவ்வளவு பிரச்னை. நீங்கள் ஒன்றுபட வேண்டும்' என்றார்.

 அதற்கு எடப்பாடி சமயயோசிதமாக பதிலலித்தார். அதாவது இங்கு 'ஒரு பிரச்னையுமே இல்லையே... நாங்க வேட்பாளரைப் போட்டுட்டோம். பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டோம். ஆதரவளிக்க விருப்பப்பட்டவங்க ஆதரவளிச்சுட்டாங்க. இதுல என்ன பிரச்னை?' என்று கேள்வி எழுப்பினார்.

 விடாத அண்ணாமலை,  'இல்லைங்ணா. நீங்க ஒற்றுமையாக இருந்தால் சின்னம் நமக்குத்தான் கிடைக்கும்' என்றார்.

  'சின்னம் யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யட்டும் என்ற எடப்பாடி எங்களுக்குச் சின்னம் கிடைச்சாலும், கிடைக் காட்டியும் பரவாயில்ல. தேர்தலைச் சந்திக்கிறோம். தொண்டர்கள் எங்ககிட்டதான் இருக்காங்க.  சின்னத்துக்காகவோ, வேறு எதற்காகவோ நாங்கள் பின்வாங்க மாட்டோம்' என்றார் பிடிவாதமாக.

   அதுவரை அமைதியாக இருந்த சி.டி.ரவி, பன்னீர் அண்ணாவும் நீங்களும் ஒண்ணு சேர்ந்தாதான் நம்ம கூட்டணிக்கு பலமா இருக்கும் என்றார்.

    பிரதமர் மோடியை அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்த பின்னரே இந்த சந்திப்புகள் நடந்தன.

  இந்நிலையில் பிப்ரவரி 4-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "எடப்பாடியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பி.எஸ்-ஸிடம் கோரிக்கை விடுத்தோம். சின்னம் முடங்கிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்" என்று பேட்டியில் அம்பலப்படுத்தினார்.

 இதை பன்னீர் அணியினர் எதிர்பார்க்கவில்லை, நமக்குள் பேசியதை  ஏன் வெளியில சொல்றாரு அண்ணாமலைஎனப் பன்னீரிடம் சீனியர்கள் எகிறினார்களாம்.

 அதெல்லாம் பாஜகவிடம் இருந்து வந்த அழுத்தத்துக்கு பின்னர் அமுங்கிவிட்ட்டது.

 அதன் பின்னரே பன்னீர் அணியில் உள்ள வைத்திலிங்கம், “இரட்டை இலைச் சின்னத்தில் யார் நின்றாலும் அவருக்கு எங்கள் ஆதரவு தருவோம்” என்று அறிவித்தார்.

  அவைத்தலைவர், பொதுக்குழு வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு இதையெல்லாம் மையப்படுத்தித் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் என ஓ.பி.எஸ்-ஸிடம் கட்சி  சீனியர்கள் டிஸ்கஸ் நடத்தினார்கள்.

   அதிலும் மூக்கை நுழைத்த பா.ஜ.க. 'இந்தப் பிரச்னையை வளர்த்துக்கிட்டே போகாதீங்க. வேட்பாளரை வாபஸ் வாங்குங்க. தேவையில்லாம சின்னம் முடங்கும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறுவதற்கு இடமளித்துவிட வேண்டாம். விட்டுக்கொடுங்க என்று நெருக்கினார்கள்.

  பாவம் பன்னீர் கண்கலங்கிவிட்டாராம்.

 ஏன்னா பா.ஜ.க சொல்றதைத்தானே ஆரம்பத்துலருந்தே பன்னீர் கேட்டு செயல்பட்டு வருகிறார்.

   வேட்பாளரைப் போடச் சொன்னாங்க... போட்டார். பா.ஜ.க ஆதரவுன்னு சொல்லச் சொன்னாங்க, சொன்னார். சின்னத்துக்குக் கையெழுத்து போடுறேன்னு சொல்லச் சொன்னாங்க அதையும் செய்தார். ஆனால் இப்போ வாபஸா என்று கண்கலங்கியே அதற்கு ஒப்புக்கொண்டதாம் பன்னீரு தரப்பு. அதற்கான அறிவிப்பை கு.ப.கிருஷ்ணன் வெளியிட வைத்தது.

 இதற்காக பன்னீருக்கு அதிமுகவில் பெரிய எதிர்காலம் கிடைக்க பா.ஜ.க. துணை நிற்குமாம்.

  அதற்கு ஈரோடு இடைத்தேர்தல் ரிசல்ட் கைகொடுக்கும் என்கிறார்கள், பார்கலாம் நம்பிக்கைதானே வாழ்க்கை.

 மேலும், எடப்பாடியை விட்டுக் கொடுக்க வேண்டாம் எனவும்,இரட்டை இலை முடங்காமல் இருக்க பார்த்துக் கொள்வதோடு,   பன்னீரை வாபஸ் பெறவைக்கவும், பா.ஜ.க. இப்படி தந்திரம் செய்திருக்கிறது.

 அப்படிப்பார்த்தால் பாஜக சொல்லிக் கொடுத்தபடிதான் எடப்பாடி செஞ்சிருக்காரு என்கிறது அரசில் வட்டாரம்.

 இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அதிமுக வின் லகானை பா.ஜ.க.கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது.

 இப்படி ஈரோடு தேர்தலுக்காக இவர்கள் குட்டிக்கரணம் அடிக்கும் சூழலில் ஆளுங்கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டிவருகிறது.

  அதற்காக பணம் படை என்று களம் இறங்க, அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டு வருகிறதாம்.

  இதற்காக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஸ்பான்சர் செய்துள்ளார்களாம்.

  எது எப்படி ஆயினும் இனிப்புச்செய்தி கொடுக்கப்போவது வாக்காளர்கள் தானே?