சூடுபிடிக்கும் சசிகலா.... சிறை.... லஞ்ச...வழக்கு!

சூடுபிடிக்கும் சசிகலா.... சிறை.... லஞ்ச...வழக்கு!

  ச.செல்வராஜ்,

  சூடுபிடித்திருக்கிறது சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய வழக்கு.

  கர்நாடா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ராகர சிறையில் விகே சசிகலா நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்தார்.

 அந்த சிறையில், சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீதான இறுதி விசாரணை அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, சொகுசு வசதி செய்து கொடுப்பதற்கு, சிறைத்துறை அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 இந்த வழக்கில் ஏ.சி.பி., என்ற ஊழல் ஒழிப்பு போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை.

  வழக்கு தாமதமாவதால் சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.    

  இது தொடர்பான விசாரணையின் போது, 'ஏ.சி.பி.,யினர் உரிய விசாரணை நடத்தவில்லை' என, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

  சென்ற நவம்பரில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'கர்நாடக உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டு, டிசம்பர் 16க்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான முதன்மை அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தது.

 அப்போது அரசு வக்கீல் வாதாடுகையில், 'லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை முடித்து விட்டனர். தவறு செய்தவர்களிடம் விசாரணை நடத்த முன் அனுமதி கேட்டு, 2021 ஜூலையில், உள்துறை செயலருக்கு அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.'இதை 20 நாட்களுக்கு முன்பே, உள்துறை செயலர் பரிசீலித்து, உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்' என நீதிபதியிடம் தெரிவித்தார்.

  அதே நேரத்தில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜ்குமார் கூறியதாவது: இறுதி அறிக்கையை இரண்டு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அளிக்க அரசு தரப்பில், செப்டம்பர் 7ல் மீண்டும் 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அறிக்கை அளிக்க தாமதமானால், உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

 இருதரப்பையும் கேட்ட தலைமை நீதிபதி, 'மனுவின் மீது நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை நாள் கால அவகாசம் வேண்டும்?' எனக் கேட்டார். அரசு தரப்பு வக்கீல், 'தற்போது பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. உள்துறை அமைச்சர் அங்குள்ளார்.

   இரு வாரங்களுக்கு பின் வருவார். அதற்குள் அவர் அனுமதி பெற்று முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்' எனத் தெரிவித்தார்.

  அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

ஆக சசிகலா.... சிறை.... லஞ்சம்.... மேட்டர் சூடுபிடிக்கிறது.