காங்கிரஸை கழற்றிவிடாதீங்க மம்தா...!

காங்கிரஸை கழற்றிவிடாதீங்க மம்தா...!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  தேசிய அளவிளான கூட்டணியில் காங்கிரஸை கழற்றிவிடாதீங்க மம்தா என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா தலையங்கம் வெளியிட்டுள்ளது.

 காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தேசிய அளவில் புதிய எதிர்க்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டிருக்கிறார்.

  இந்நிலையில் இந்த மெகா கூட்டணியில் காங்கிரஸை இணைக்க மம்தா ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.

 அப்படியிருக்க, 'காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க முயற்சிப்பது, மதவாத சக்திகளுக்கு மேலும் சாதகமாக அமைந்துவிடும். முதலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை தேவை' என, சிவசேனா கட்சி சார்பில் கருத்து எழுந்துள்ளது.

 அந்த கருத்தை மையமாக கொண்டு சிவசேனா கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் வெளியான  தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

   காங்கிரசை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ., ஈடுபட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது.

   இந்நிலையில் அதை முழுமையாக குழியில் தள்ளி அதில் வளர வேண்டும் என பிறர் நினைப்பது சரியானதல்ல.காங்கிரசை எதிர்த்து செயல்படுவது என்பது பா.ஜ., மற்றும் மதவாத சக்திகளுக்கு வலுவூட்டு வதாகவே அமைந்துவிடும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியே, பா.ஜ.,வை தேசிய அளவில் எதிர்ப்பதற்கு உள்ள ஒரே வாய்ப்பு. காங்கிரஸ் தலைமையில் சந்திக்க விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பல கருத்துக்களை தெரிவித்து குழப்பக் கூடாது.

  எதிர்க்கட்சிகள் இடையே முதலில் ஒற்றுமை வேண்டும். அதன்பின் யார் தலைமை தாங்குவது என்பது குறித்து யோசிக்கலாம்.

  காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் தங்கள் நிலை என்ன, எதிர்கால திட்டம் என்ன என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் இவ்வாறு சாம்னா பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.