மாமல்லபுரத்தை குப்பை காடாக்கிய காத்தாடி விழா!

ஜி.சாந்தகுமார்,
சர்வதேச காத்தாடி திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்தி முடித்த நிலையில் தற்போது அந்த சர்வதே ச சுற்றுலா தளம் குப்பை காடாக்கப்பட்டிருக்கிறது.
காத்தாடி திருவிழா நடத்தப்பட்ட இடமானது சுற்றுலா துறைக்கு சொந்தமான இடமாகும். அங்கு குப்பை குவியலுடன், அலங்கோலமாக உள்ளது.
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 14 ஏக்கர் இடம் கடலோர திறந்தவெளி இடம் உள்ளது. பயன்பாடில்லாத இந்த இடத்தில், தமிழக சுற்றுலாத் துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கடந்த 13 முதல் 15ம் தேதி வரை, சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்தினர்.
இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 10 குழுவினர், பல உருவங்களில், வண்ண காத்தாடிகளை பறக்கவிட்டனர். இதையும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை கச்சேரியையும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். அங்கு உணவு உள்ளிட்டவற்றுக்காக விற்பனை அரங்கங்கள் அமைக்கப்பட்டன. இதனால் அங்கு குப்பை சேர காரணமாகிவிட்டது.
உணவு பொருட்கள் வழங்கிய பாலிதீன் பாக்கெட்டுகள், பாக்கு மட்டைகள் உள்ளிட்டவை, இப்பகுதியில் குவிந்து கிடக்கின்றன. நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் கடந்தும் கூட தற்போது வரை குப்பை அகற்றப்படாமல் குவியல் குவியலாக உள்ளது.
தற்போது அவற்றை அகற்ற ஊழியர்கள் நாக்கு தள்ளிக்கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.