கெங்கையம்மன் கோவில் திருவிழா நடத்த எம்.எல்.ஏ. கட்டிங் கேட்டாரா!

கெங்கையம்மன் கோவில் திருவிழா நடத்த எம்.எல்.ஏ. கட்டிங் கேட்டாரா!

 ஜி.கே.குலசேகரன்,

  குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்காக விடப்பட்ட ஆன் லைன் டெண்டரை ரத்து செய்ய கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் விழாக்குழுவினரும், மக்களும் மனு அளித்தனர்  - திமுக எம்.எல்.ஏ ஒருவர் பணம் கேட்பதாகவும் அவர் தலையிடுவதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு.

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கிராமத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது, இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி ஒன்றாம் தேதி நடக்கும்.

 ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் திருவிழா நடக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழா மிகவும் எளிமையாக நடந்தது உபயம் கொரோனா.

 அப்படியிருக்க, இந்த ஆண்டு திருவிழாவை பெரிய அளவில் நடத்த அனுமதியளிக்கப்பட்டது, ஆனால் குடியாத்தம் நகராட்சி ஆலய வருமானத்தில் பங்கு கேட்டுள்ளனர்.

 மேலும் இந்து சமய அறநிலையத்துறை இ டெண்டர் எனப்படும் இணைய வழி டெண்டர் மூலம் திருவிழாவுக்கான ஏலம் மற்றும் கடை ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இதனை ரத்து செய்ய கோரி இன்று விழாக் குழுதலைவர் சம்பத் தலைமையில் குடியாத்தம் கெங்கையம்மன் விழாக்குழுவினர் மற்றும் கோபாலபுரம் கிராம மக்கள் பாமக மாநில துணைதலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் மற்றும் இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் ஆகியோர்களுடன் வந்து இணைய வழி டெண்டர்களால் மக்களுக்கு பாதிப்பு என கூறி இணைய வழி டெண்டர்களை ரத்து செய்ய கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

  இதன் பின்னர் விழாக்குழு தலைவர் சம்பத் கூறுகையில், விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கும் ஆனால் இந்த ஆண்டு நகராட்சி மூலம் கெங்கையம்மன் ஆலய வருமானத்தில் பங்கு வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 ஆலய பணத்தை எப்படி அவர்களுக்கு கொடுக்க முடியும் மேலும் இ டெண்டர் வைத்துள்ளனர் அதனை ரத்து செய்ய வேண்டும் காரணம் இதில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் தலையிட்டு ஜாதி அரசியலை செய்கிறார்.

 அவர் பணம் வேண்டும் இவ்வளவு கொடு என கேட்கிறார் இது எந்த வகையில் நியாயம் ஆகவே இ டெண்டரை ரத்து செய்து மறு ஏலம் நடத்த வேண்டும் என கூறினார்.