நீல நிற அட்டைக்கு 10 ம் தேதிவரை முகாம்!

ஆர்.ரமேஷ்,
தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து திருப்பத்தூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இத்துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அதி.1) துறை, நாள். 25-06-2012-இன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும்.
இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனானிகள் அனைவருக்கும், பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைகள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 10-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்