ஏம்மா ஷர்மிளா 'எலிக்குட்டி மாதிரி இருக்க நீயெல்லாம் பஸ் ஓட்ட வந்துட்டியா?

அருண் ஹென்றிக்ஸ்,
கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் வைத்துள்ளார். இத்தனைக்கும் அவர் பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். அவரைப் பார்த்துதான் ஏம்மா ஷர்மிளா 'எலிக்குட்டி மாதிரி இருக்க நீயெல்லாம் பஸ் ஓட்ட வந்துட்டியா? என்ற் உ பலரும் கிண்டலடிக்கிறார்கள்.
தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார். அதற்கேற்றவாறு பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சியும் உரிமமும் பெற்றுள்ளார்.
இது குறித்து ஷர்மிளா கூறுகையில்,
அய்யா என் அப்பா டிரைவர்தான், ஆனாலும் எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். “நான் தற்போது பயணிகள் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறேன். என் அப்பாவும் ஆட்டோ ஓட்டி வருகிறார். வாடகை இல்லாத நாட்களில் அவருடன் ஆட்டோ ஓட்டச் செல்வேன்.
டிரைவர் என்றாலே சமூகத்தில் அடிமட்டமாகவே பார்ப்பார்கள். ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது.
நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. அப்போதே அப்பாவின் ஆட்டோவை எடுத்து ஓட்டுவதற்கு பழகினேன். அப்படிதான் எனக்கு இதன் மீது ஈடுபாடு வந்தது.
வேலை என வந்தபோது உனக்கு எதில் விருப்பமோ அதை செய்மா என்று வீட்டில் கூறிவிட்டார்கள்.
அப்போது தான் 'எனக்கு டிரைவிங்ல ஆசை இருக்கு, டிரைவர்னாலே ரொம்ப சீஃப்பாக ஆக பார்க்குறாங்க, இருந்தாலும் டிரைவிங்கை என்னுடைய துறையாக தேர்வு செய்தேன். அப்பா முதலில் தயங்கினார். நாளை உன்னையும் சீஃபாக ஆக பார்க்க மாட்டார்களா என அப்பா கேட்டப்ப தான், அந்த எண்ணத்தை மாத்ததான் என்னுடைய முடிவுனு சொன்னதும் புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்தார்கள்.
என் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே பக்கபலமாக இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன்.
பெண்கள் பல ஊர்களில் பேருந்து ஓட்டியுள்ளார்கள். ஆனால் கோவையில் விசாரித்த வரை அப்படி யாரும் இல்லை. உனக்கு டிரைவிங்கில் சாதிக்க வேண்டுமென்றால் பேருந்து ஓட்டுவதற்கு ஆரம்பி என முதன்முதலில் அப்பா தான் எனக்கு அந்த ஆர்வத்தை விதைத்தார். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் அப்பா தான் முழு காரணம்.
'நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு, கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன். ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசுறத அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு' என் அப்பா ரொம்ப பக்கபலமா இருந்தாங்க.
அதன் பிறகு பேருந்து பயிற்சிக்கு சென்றேன். அப்பா வேலைக்குச் செல்வதால் ஓட்டுநர் பயிற்சிக்கு செல்லும்போதெல்லாம் அம்மா தான் என்னுடன் அனைத்து இடங்களுக்கும் வருவார். டிரைவிங் மீது இருந்த ஈடுபாட்டால் பேருந்து எளிதாக பழகிக் கொள்ள முடிந்தது.
பயிற்சி எல்லாம் முடித்து நான்கு மாதங்களுக்கு முன்பு பேருந்து உரிமம் பெற்றுவிட்டேன். பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள்.
உரிமம் பெற்ற உடன் பேருந்து இயக்க அனுமதி வேண்டும் என நான் கேட்கச் சென்றேன். அப்போது அந்த செய்தி பரவலாக வந்திருந்தது. ஆனால் பேருந்து இயக்குவதற்கான அனுமதி கிடைக்க தாமதமாகும் என்றார்கள். பேருந்து இயக்க அனுமதி கேட்டுச் சென்றால் திறமையை வைத்து அல்லாமல் உயரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். 'எலிக்குட்டி மாதிரி இருக்க நீ பஸ்ஸெல்லாம் ஓட்டிருவியா, டயர் சைஸ் தான் இருக்க உனக்கு பஸ் வேணுமா' என்று கூட என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
எனக்கு வெளியூர், தொலைதூர பேருந்துகளை ஓட்டுவதற்கு ஆசை இல்லை. நான் தினமும் வந்து செல்கிற காந்திபுரம் - மருதமலை வழித்தடத்தில் உள்ள பேருந்து தான் வேண்டும். அது தான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்” என்று கூறினார் நம்பிக்கையுடன்.