புரூஸ்லீ படம்-மட்டன் கபாப்...ஒரு ரூபாய் டிக்கெட்!

ம.பா.கெஜராஜ்,
"லிங்க்கை கிளிக் செய்து மேன்மெஷின் இசையை கேட்டுக் கொண்டே கட்டுரையை வாசிக்கவும்"
வேலூர் மாவட்டம், வேலூர் நகரம், எல்.பி.எம்.தெருவில் ஒரு திரையரங்கம் இருந்தது. அதன் பெயர் தினகரன் தியேட்டர்.அதில் வருடத்துக்கு ஏழு நாட்கள் மட்டும் தமிழ் படங்கள் திரையிடப்படும்.
மற்றபடி ஆண்டு முழுக்க ஆங்கிலப்படம் தான். ஆனால் அந்த திரையரங்கின் மூச்சு நின்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
இந்நிலையில் அதை மையப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
அதில் இன்று காலை வேலூர் தினகரன் தியேட்டர் இருந்த இடத்தை இருசக்கர வாகனத்தில் கடந்து செல்கிறேன். திடீரென மழை. மழைக்கு ஒதுங்கி நிமிர்ந்து பார்க்கிறேன்,அந்த இடத்தில் பெரிய அப்பார்ட்மெண்ட்.
மனதிற்குள் பழைய நினைவுகள்.
ஐநூறு ஆயிரம் என்று செலவழித்து சினிமா பார்த்தாலும் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சுகம் இங்கே அனுபவித்தது.ஆங்கல படம் மட்டுமே இந்த திரையரங்கில் வரும்.
புரூஸ் லீ யை நமக்கு அறிமுகப்படுத்தியது இங்கே தான். scen canory , Roger Moore , pierce Bronson போன்ற ஜேம்ஸ் பாண்டுகளை நமக்கு அறிமுகப்படுத்தியது இங்கே தான்.
The Exorcist, Omen போன்ற horror படங்கள் பார்த்ததும் இங்குதான்.
The Ten Commandments அதுவும் கிராபிக்ஸ் ,சப் டைட்டில்,மொழி மாற்றம் இல்லாமல் முழுக்க ஆங்கிலத்திலேயே பார்த்த படங்கள்.
டிடிஎஸ் இல்லாத அந்த காலத்தில் சைடு ஸ்பீக்கரில் இசை முழங்கும்... ஸ்கிரீன் ஓப்பனிங் போது ஒரு அதிரடி பிண்ணனி மியூசிக் வரும்...
We are the Robots என்ற பாடல் The Man Machine ஆல்பத்தில் இருந்து போட்டு... H‡E எடுத்திருப்பார்கள்...!.. அப்பவே அப்படி..!!
ஒரே ஒரு நாள் அந்த அனுபவம் மீண்டும் கிடைக்குமா?.
எந்த எந்தத் திரையரங்கிலும் இல்லாத அந்த மட்டன் கவாப் இன்னும் நா சுவையில். இட்லிகாரம்மாவின் கைபக்குவத்தில் எள்ளுவடை (உள்ளங்கையையும் தாண்டி பெரிசா இருக்கும்).
படம் பார்ப்பவர்கள் நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிப்பதும், வில்லன் நடிகருக்கு எதிராக உணர்ச்சி வேகத்தில் குரல் கொடுப்பதும், ஆங்கிலத்தில் நடக்கும் வாக்குவாதத்துக்கு புரிந்து கைதட்டி ஆரவாரம் செய்வதும், சாதாரணமாக நடக்கும்.
இந்த தியேட்டரில் திரையிடப்படும் ஆங்கில சினிமாவை பார்க்க நிரம்பும் ஆடியன்ஸ்களில் 90 சதவிகிதம் பேர் படிக்காதவர்களும், கூலி தொழிலாளர்களும் தான் என்பது தனிச் சிறப்பு. அதற்கேற்றவாறு டிக்கெட் ஒரு ரூபாய்தான். கடைசியாக பத்துரூபாய்க்கு வந்தது.
முதல் வகுப்பு இருக்கைகளை சி.எம்.சி.மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியினர் நிரப்புவார்கள்.
படம் முடிந்து வெளியே வரும்போது, படத்தில் வந்த காட்சிகள் இரண்டு நாட்களுக்கு மனதை விட்டு நீங்காது.
அதுவும் பிடித்த நடிகர் Roger Moore , Bruce Lee படங்களை நான்கு ஐந்து முறை பார்த்த அனுபவமும் உண்டு.
என்றைக்கு கேபிள் டிவி, தனியார் தொலைகாட்சிகள் திரைப்படங்கள் மூலம் வீட்டிற்குள் மக்களை முடங்க வைத்தனவோ அன்றே திரை அரங்குகளுக்கு சாவு மணி அடித்து விட்டார்கள்.
இன்றைக்கும் மிகப் பழமையான இத் திரை அரங்கு இருந்த இடத்தை கடந்து செல்லும் போது ஏதோ ஒரு சந்தோஷத்தை தொலைத்து விட்டது போலவும், வீடு தேடி தொலைகாட்சியில் வந்த திரைப்படத்தால் உறவுகளின் அர்த்தமும், கூட்டுக் குடும்ப ஒற்றுமையும், நிம்மதியும் தொலைந்து போனது போலத் தோன்றுகிறது.
திரை அரங்குகள் இன்றைக்கு அழிந்து போய் விட்டாலும் அவற்றின் நினைவுகள் அழியவில்லை.
நினைவுப்படுத்தியதே சந்தோஷமாக அல்லவா உள்ளது.