மு.க.ஸ்டாலின்தான் பிரதமராம்! திமுகவினர் சொல்வதாக செல்லூர் ராஜி பேட்டி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனால்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜனதா கட்சிக்கு தி.மு.க. பல்லக்கு தூக்கி அமைச்சரவையிலும் இடம் பிடித்தது.
அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கி முக்கிய துறைகளில் மந்திரி பதவி பெற்றது.
அந்த சமயத்தில்தான் 2ஜி மூலம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை தி.மு.க ஊழல் செய்தது. பா.ஜ.கவுக்கு எதிராக தி.மு.க. தேசிய அளவில் கட்சிகளை திரட்டி வருகிறது.
எனவே மு.க.ஸ்டாலின்தான் பிரதமர் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக மக்கள் அவர்களிடம் சிக்கி உள்ளனர். இது போன்று இந்திய மக்களும் சிக்க வேண்டுமா?. அ.தி.மு.க.விற்கு கூட்டணி என்பது துண்டு மாதிரி. ஒரு தேர்தலில் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கிறார்கள்.
தி.மு.க. கடந்த தேர்தலில் தனித்து இருந்தால், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்து இருப்பார். 13 கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது. போக்குவரத்து துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கி கிடக்கிறது.
அதே போல் ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஊழியர் 3 கடைகளில் பணியாற்றுகின்றனர் என்றார்.