அரசு இடத்தை ஆட்டையை போட்ட முன்னாள் தலைவர்! பொது பணிகள் செய்ய முடியாமல் சிக்கல்!

ஜே.தேவபிரகாசம்,
வேலூரிலிருந்து, திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் நுழையும் பகுதியில் கம்மவார்ன் பேட்டை என்கிற கிராமம் உள்ளது.
இங்கு அரசாங்கத்துக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் 26 சென்ட் நிலம் இருக்கின்றன.
அந்த இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டி கொடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. அதற்காக கடந்த ஆட்சியின் போது நடந்த கிராம சபை கூட்டத்தின் போதும் தீர்மானம் நிறைவேற்றி, அவற்றை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பேரில் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் பணி ஆணையும் அரசாங்கத்திடமிருந்து அளிக்கப்பட்டுவிட்டது.
அதை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து செயலாளர் கப்சிப் என்று இருக்கிறார்.
கட்டுமான பணிகளை துவக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சுத்துபட்டு உள்ள மக்கள் போர்கொடிதூக்கியிருக்கிறார்கள்.
தற்போது ரேஷன் கடை பாழடைந்த சமூதாயக் கூடத்தில் இயங்குகிறது. பஞ்சாயத்து அலுவலகத்துக்கும் முறையான கட்டிடம் இல்லை, விஏஓ அலுவலகம் கட்ட வேண்டும். புதிய சமுதாய கூடம் கட்ட வேண்டும், மேலும் மினி கிளினிக் ஒன்றை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்கிறார்கள்.
அங்குள்ள ஒரு இளைஞர் தெரிவிக்கையில், பஞ்சாயத்து அலுவலக கட்டிட பணியை துவக்கவே யோசிக்குறாங்க, அதுல உள்நோக்கம் இருக்கிறது.
ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்னர் சிவலிங்கம் என்பவர் இந்த பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அப்போது மேற்படி சர்வே எண் 386 இல் உள்ள அரசு தோட்டத்தை பலருக்கு விற்பனை செய்து ஆட்டையை போட்டுவிட்டார்.
தலா மூன்று சென்ட் என்று விற்று ஏப்பம் விட்டுள்ளார்.
ஆனால் அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று தற்போது தான் தெரிய வந்திருக்கிறது. வி.ஏ.ஓ. மற்றும் ஆர்.ஐ ஆகியோர் அதற்கான சான்றுகளை அளித்துள்ளனர். ஆனாலும் பஞ்சாயத்து செயலாளர் அசரமாட்டேன் என்கிறார்.
ஆகவே உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு மேற்படி அரசு தோட்ட இடத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பொதுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.