அம்மாடியோவ்! லாட்டரி அதிபர் மார்ட்டின் பா.ஜ.கவுக்கு 100 கோடி நிதி!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை,வழங்கி உள்ளார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி கொதித்து போயிருக்கிறார்.
தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெருநிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் சேர்ந்த, 'புரூடெண்ட் எலக்ட்டோரல்' அறக்கட்டளைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த அறக்கட்டளை, இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனிடம், அக்டோபர் 20ம் தேதி கடிதம் ஒன்றை சமர்ப்பித்தது.
அதில் கடந்த 2020- - 21ம் நிதியாண்டில், தேர்தல் நிதியாக, 245.72 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதில், 209 கோடி ரூபாய், பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, 19 பெரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்ச தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், அவருக்குச் சொந்தமான, 'பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ்' நிறுவனம் வாயிலாக வழங்கினார்
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடி ரூபாயும், பல்வேறு மாநில கட்சிகளுக்கு 34 கோடி ரூபாயும், மார்ட்டின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லாட்டரி அதிபர் மார்ட்டின், பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதி வழங்கிய பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பொங்கி எழுந்துள்ளார்.
ஏம்பா உங்களுக்குத் தான் மார்ட்டின் 2 கோடி கொடுத்துட்டார்,நீங்களும் வாங்கி கல்லாவுல போட்டுக்கொண்டீர்களே? சும்மா இருக்கக்கூடாதா என்று மக்கள் கேட்கிறார்கள்.