ஹோட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான்! உறுதிப்படுத்திய முதலமைச்சர்!!

Ma.ba.Gajaraj,
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் சிலிண்டர் வெடிக்கவில்லை, அது வெடிகுண்டு தான் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் உள்ள ராமேஸ்வர கஃபேவில் வெடிகுண்டு வெடித்தது.
அப்போது அந்தப் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஓட்டலின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்துள்ளனர்.
சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால் வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைப்பையில் இருந்துதான் குண்டு வெடித்துள்ளது.
இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்பு தான் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.
காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலைமை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சரை நான் கேட்டுக்கொண்டேன்" இதற்குக் காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.