ஏம்பா அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கலையா பாவம்? குழந்தை கேட்கும் கேள்விக்கு என்ன பதில்!

ஏம்பா அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கலையா பாவம்? குழந்தை கேட்கும் கேள்விக்கு என்ன பதில்!

 ஜி.சாந்தகுமார்,

 நமது செய்தி ஆசிரியருக்கு மதுரை மாவட்டத்திலிருந்து பாண்டியராஜன் என்பவர் உருக்கமான கடிதம் ஒன்றை னுப்பிவைத்திருக்கிறார்.

  மின்னஞ்சல் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட சங்கதி அவ்வளவு பெரிய தகவலா இல்லையா என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இன்றைக்கு சூடு சொரணை கெட்ட சம்மந்தப்பட்டவர்களால் நாடெங்கும் காணக்கூடிய காட்சியாக இப்படிப்பட்டவைகள் உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து பழகிவிட்ட நமக்கும் சற்று சுதி இறங்கித்தான் போயிருக்கிறது.

 வாங்க மேட்டருக்குள் செல்வோம்,

  மதுரை மாவட்டம், அணுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர், இரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது குழந்தையை ஸ்கூட்டரில் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

  அவர்கள் வள்ளலார் மற்றும் பாபுநகர் பகுதியை கடக்கும் போது அங்கு சாலையில் தேங்கியிருந்த தண்ணிரில் சறுக்கி இருவரும் விழுந்து விட்டனர். கைகால் சிராய்ப்பு மற்றும் உடைகள் சகதியாகிவிட்டது.இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள், அவர்களை தூக்கிவிட்டனர். பின்னர் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கு தகவல் சொன்னார்கள்.

   இதோ வந்து சரி பண்ணிக் கொடுப்பதாக சொன்னவர்கள் ஒரு வாரமாகியும் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றவே இல்லை.

  அப்படியிருக்க பல விபத்துகளை அந்த பகுதி ஏற்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் தினமும் பார்த்து பழகிய பாண்டியராஜனின் குழந்தை அவரது தந்தையிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது. அதற்கு பதில் சொல்ல முடியாத பாண்டியராஜன் எப்படியாவது எங்கள் பகுதியை சீர்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று நமக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 அதில் கூறப்பட்டிருப்பதாவது,

  செய்தி நிர்வாகத்திற்கு வணக்கம்,மதுரை மாவட்டம், அணுப்பானடி,டீச்சர்ஸ் காலனி, வள்ளலார் நகர் மற்றும் பாபு நகர் பகுதியில் வாழும் குடியிருப்பு மக்களின் சார்பாக ஒரு பணிவான வேண்டுகோள். எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.  இந்நிலையில் நான் உட்பட பலர் இங்கு விழுந்து கஷ்டப்பட்டிருக்கிறோம்.

எங்கள் பகுதியில் மழை பெய்தால் 2 அடி 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் நோய்த் தொற்று உருவாக வாய்ப்பு உள்ளது.

 இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.  தொடர்ந்து இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், இனி விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சம்மந்தப்பட்டவர்களிடம் முறையிட்டோம். இத்தனைக்கும், இப்பகுதியில். கல்லூரிகள் பள்ளிகள் இருக்கின்றன.

  இருந்த போதும், ஒருத்தர் கூட வந்து எட்டிப்பார்க்கவில்லை.

  ஆகவே மக்கள் ஒன்றினைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, அந்த பகுதியை சீர்படுத்த அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம், அதற்கும் பதில் இல்லை.

  இதையெல்லாம் பார்த்த என் குழந்தை வாங்கப்பா கவர்ன்மென்ட் ஆபிசருகிட்ட சொல்லலாம் என்று அழைக்கிறது.

  ஏம்பா, இவுங்கதான் கவர்ன்மென்டு அதிகாரிங்க என்று சொன்னதும், இவ்ளோ பேரு இருக்காங்க ஆனா சாலையை சரிபண்ணலையே? இவுங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கல்யாப்பா பாவம் அவுங்க!! என்று என் குழந்தை சொல்கிறது.

 அதிகாரிகளும் சீபடுத்த முன்வரலை, மக்களின் செயல்பாட்டுக்கும் தடை போடுகிறார்கள். குழந்தையின் கேள்விக்கு நான் என்ன பதிலை சொல்ல.      

 இப்போதெல்லாம் அதிகாரிகளின் மெத்தனம் குழந்தைகளுக்கும் தெரிய தொடங்கிவிட்டது என்று வருத்தமுடன் கடிதத்தை முடித்திருந்தார்.

    இந்த கடித்தம் குறித்த தகவல்கள் சம்மந்தப்பட்ட அத்காரிகளின் பார்வைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடில்லாமல் மக்களும் குரலெழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.