சீட்டு பட்டாசுகள் வீடுகளில் பதுக்கினால் நடவடிக்கை பாயும்! வேலூர் கலெக்டர் எச்சரிக்கை!

உ.சசிகுமார்,
பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பணியாளர்கள், விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் என்.சபீனா தலைமை தாங்கினார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது-
கடந்த சில தினங்களுக்கு பட்டாசு விபத்தில் ஏராளமானோர் பலியானதை தொடர்ந்து பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்ட பாதுகாப்புடன் உற்பத்தி செய்வது விற்பது குறித்த பட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைவரும் பாதுகாப்பு அம்சங்களை கையாண்டு பட்டாசு தயாரிப்பது விற்பதை செய்ய வேண்டும் பட்டாசு விபத்துகளால் உயிர்சேதமும், பொதுசேதமோ ஏற்படா வண்ணம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும் தீபாவளி சமயங்களில் பட்டாசு சீட்டு என்ற பெயரில் வேலூர் மாவட்டத்தில் சீட்டு நடத்தி சட்டவிரோதமாக பட்டாசுகள் வீடுகளில் பதுக்கி வைப்பதாக தகவல்கள் வந்துள்ளது அது போல் யாராவது தீபாவளி சீட்டு நடத்தி பட்டாசுகளை பதுக்கி வைத்து அதை வழங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
முன்னதாக தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தீவிபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்திலா பட்டாசு உற்பத்தி குறித்தும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குராசாயணங்கள் கையாளுதல்,மருந்து கலவை செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ராசாயணங்களை பயன்படுத்துதல்,இருப்பு வைத்தல் மற்றும் உற்பத்தி செய்த பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்து செல்லுதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
அதிகளவில் ராசாயண கலவை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்துவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக பட்டாசு விபத்து ஏற்படுகிறது.எனவே, மருந்து கலவை செய்து செலுத்தும் பணியில் நன்கு பயிற்சி,அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தீவிபத்துக்களை தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் என்.உமாபாரதி தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பட விளக்கங்களுடன் நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சித்ராதேவி,நகராட்சி ஆணையாளர் எம். மங்கையர்க்கரசன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன்,ஆர். திருமலை உள்பட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தீப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் வி.வி.ராஜன்,தலைவர் வி.பிச்சாண்டி,பொருளாளர் ஆர்.ரவிசங்கர்,நிர்வாகி எம்.ஏ.கே.சீனிவாசன்,குடியாத்தம் பட்டாசு விற்பனையாளர்கள் சங்க தலைவர் தாயுமானவர்,செயலாளர் கிரி,பொருளாளர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சாந்தினிபிரபா வரவேற்றார்.குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன்,மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்