மீண்டும் மோடி பிரதமரானால் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும்!தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின்!

மீண்டும் மோடி பிரதமரானால் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும்!தேர்தல் பொதுக்கூட்ட பிரச்சாரத்தில் முதல்வர் மு க ஸ்டாலின்!
ம.பா.கெஜராஜ்,
மீண்டும் மோடி பிரதமரானால் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிதம்பரம், லால்புரம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சிதம்பரம் தொகுதி வி.சி.க. வேட்பாளார் தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்குஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்; 2-ம் விடுதலை போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி. சமூக நீதி நமக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை; ஏராளமான தியாகங்களால் விளைந்ததுதான் சமூக நீதி.
பிரதமர் மோடிக்கு சமூக நீதி மேல் அக்கறையில்லை. சமூக நீதி இந்தியாதான் இன்றைக்கு நமக்கு உடனடியாக தேவை. சமூக நீதியை காக்கும் ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும். ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேறப் போகிறது.
சில நாட்களுக்கு முன் பாஜகவை விமர்சித்து பேசியவர்கள் இப்போது அவர்களுடன் சேர்ந்துள்ளனர். பாஜக – பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. பாமக பாஜக உடன் கூட்டணி வைத்தது பாமக தொண்டர்களே விரும்பவில்லை.
இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில அமைந்ததும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்கு ஆக்கப்படும்.
பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும்.ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்பட மாட்டாது. ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படும்.
மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படும். மோடி மீண்டும் பிரதமரானால் நாடெங்கும் மதவெறி தலைவெறித்தாடும்; மதக்கலவரத்தில் ஈடுபடுவோரை தேசத் தலைவர்களாக போற்றுவார்கள்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொய்களையே வரலாறாக எழுதுவார்கள். ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே ரேஷன் கார்டு, ஒரே கட்சி ஒரே தலைவர் என நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்.ஒரே ஒரே எனக்கூறி நாட்டையே ஒரே அடியாக நாசமாக்கி விடுவார்கள்.
பாஜகவின் திட்டங்கள் மோசமானவை; மிக மிக ஆபத்தானவைமோடி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார்,மேட் இன் பாஜக வாஷிங் மெஷின் அது. அந்த வாஷிங் மெஷினில் ஊழல் செய்த தலைவர்கள் உள்ளே போனால் தூய்மையாக்கப்படுவார்கள். அந்த வாஷிங் மெஷினுக்கு கேரண்டி கேரண்டி என்று கூறி வருகிறார் பிரதமர் மோடி.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கிராமப்புறங்களில் புரட்சி செய்து வருகிறது. நான் முதல்வன் திட்டத்தால் இதுவரை 28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்த தேர்தல்.
எடப்பாடி பழனிச்சாமி வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் பேசுகிறார். பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவராம். கைக்குழந்தை கூட நம்பாத வடிகட்டின பொய்களை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
வரலாறு தெரியாமல் எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மோடி மேல் தனக்கு இருக்கும் பயத்தை மறைக்க ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அதிமுக என்ற கட்சியை கூவத்தூரில் ஏலத்தில் எடுத்துள்ளார் பழனிசாமி.
பாஜகவுக்கு எதிராக உள்ள பாப்புகள் திமுகவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பாஜக சொல்வதைப் போல் எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வாக்குகளையே வாங்க முடியாது.கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டுவிட்டு பாஜகவின் பி டீமாக இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமியை நம்ப தயாராக இல்லை. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, அதற்கு துணைபோகும் பாமக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவை வீழ்த்தியாக வேண்டும் இவ்வாறு கூறினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் தனது உரையை துவங்கும்போது மேடையில் இருந்த அனைவர் பெயர்களையும் சொன்னார். அதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பெயரை சொல்லாமல் மறந்து விட்டார். ஆகவே கூட்டம் முடிந்த பின் வேல்முருகன் பெயரைச் சொல்லி வரவேற்றார்.