நெல் எடை இழப்பால் பொண்டாட்டி தாலியை அடமானம் வைத்தேன்! கொள்முதல் நிலைய பணியாளர் தர்ணா!

நெல் எடை இழப்பால் பொண்டாட்டி தாலியை அடமானம் வைத்தேன்! கொள்முதல் நிலைய பணியாளர் தர்ணா!

 க.பாலகுரு,

திருவாரூரில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் எடை இழப்புக்காக அபராதம் கட்ட நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி நெல் கொள்முதல் நிலைய பணியாளர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  திருவாரூர் மாவட்டத்தில், 530 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் சுமார் 400 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளிமிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் நெல் மூட்டைகள் வெயிலில் அடுக்கி வைக்கப்படுவதால் அவற்றின் ஈரப்பதம் குறைந்து எடை இழப்பு ஏற்படுகிறது.

 இதனால் ஏற்படும் இழப்பை நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கணக்கில் ஏற்றப்பட்டு அபராதமாக அவர்கள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

   கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டதால் இதுபோன்ற பிரச்சனை பணியாளர்களுக்கு ஏற்படவில்லை.

   ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் திறந்த வெளியிலேயே பல நாட்களாக வைக்கப்பட்டுள்ளதால் எடை இழப்பு ஏற்படுகிறது. இதனை பணியாளர்கள் தங்களது அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

   இந்நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில், நெல் கொள்முதல் நிலையத்தில் பணி புரியும் பணியாளர் ஒருவர் (ராஜா) எடையிழப்பு காரணமாக கடந்த ஆண்டு தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்து ஒரு லட்ச ரூபாய் அபராதம் கட்டியதாகவும், தற்பொழுது இந்த ஆண்டும் திறந்த வெளியிலேயே நெல் மூட்டைகள் காய்ந்து வருவதால் மேலும் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால், தான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் அன்புராஜ்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.