என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு என்ன பால் தரவேண்டும் என்று நான் தான் முடிவெடுப்பேன்! அமைச்சர் பேட்டி!

டி.இ.முகமது இர்பான்,
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மீது எழுந்துவரும் தீவிர குற்றச்சாட்டுகள் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கிறார்¢ தமிழக பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
அதன் விவரம் வருமாறு
கேள்வி: கடந்த சில மாதங்களாக ஆவின் பால் கொள்முதல் குறித்தும் விற்பனை குறித்தும் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆவினில் உண்மையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
ப. நான் இதை வரவேற்கிறேன். கடந்த சில நாட்களில் ஆவின் மிகப் பெரிய பேசு பொருளாகியிருக்கிறது. இது எங்களுக்கு லாபம்தான். பல கோடி செலவு செய்தாலும் இந்த அளவு விளம்பரம் கிடைக்காது.
ஆவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு பல ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு விதங்களில் மக்களுக்கு மிகப் பெரிய உதவியை இந்த நிறுவனம் செய்துவருகிறது.
முதலாவதாக, எந்த விவசாயியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் தங்கள் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என நினைப்பார்கள். ஆவின் இருப்பதால்தான் பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கிறது.
அதேபோல, விவசாயப் பொருட்கள் எல்லாம் உடனடியாக விற்றாக வேண்டிய பொருட்கள். அந்தக் கட்டமைப்பு முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்தால், மிக ஆரோக்கியமற்றதாக இருக்கும். ஆவின் இருப்பதால் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இருக்கிறது.
மற்றொரு பக்கம், தனியார் எப்படி பாலின் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்கள் நிச்சயம் லாபத்துடன்தான் விலையை நிர்ணயிப்பார்கள். அரசு அமைப்பு அப்படிச் செய்யாது.
இது நடுத்தர வர்க்கத்திற்கு கீழே உள்ள மக்களுக்கு மிகுந்த பொருளாதார பலனுடையதாக இருக்கும். இதைத்தான் ஆவின் செய்துவருகிறது. இந்த நிறுவனத்தை மிகக் கவனமாக கையாண்டு வருகிறோம்.
தமிழகத்தில் தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
கேள்வி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவினின் சராசரி பால் கொள்முதல் 35 லட்சம் லிட்டராக இருந்ததாகவும் தற்போது 29 - 30 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன?
பதில்: இப்போது சராசரியாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். இது ஒரு நல்ல அளவு. ஏனென்றால் பால் உற்பத்தி என்பது எப்போதுமே ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும்.
மழை பெய்வது, தீவனம் கிடைப்பது, மாடு சினையாக இருப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதனைப் பாதிக்கும். ஆகவே, சராசரியாக தினசரி 30 லட்சம் லிட்டர் பால் என்பது ஒரு நல்ல அளவுதான்.
ஒரு கட்டத்தில் தினசரி 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்தி அதிகரிப்பு அல்ல. கோவிட் பரவல் இருந்தபோது, வாங்குவதற்கு தனியார் இல்லாததால், இங்கே கொள்முதல் அதிகரித்தது. இதை வைத்துக்கொண்டு, தவறான பிரச்சாரத்தை இப்போது செய்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் சவாலை சமாளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். ஆனால், உண்மையான பிரச்சனை என்ன? ஆவினால் கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்ய முடியாததால் பால் கொள்முதலை அதிகரிக்க முடியவில்லையா?
பதில்: எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், கோரிக்கைகள் இருக்கின்றன. பாலின் விலையை அதிகரித்துத் தர வேண்டுமென விவசாயிகள் கோரிவருகிறார்கள். அதேபோல, பாலின் சப்ளையில் எங்கேயும் இடைவெளி இல்லை. யாராவது பால் கேட்டு இல்லை என சொன்னதில்லை.
இப்போது அதிகமாக கொள்முதல் செய்து, அதிகமாக விற்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.
ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கப்படுகிறது. வாங்கிய பாலுக்கு விலை நிலுவையில்லாமல் கொடுக்கப்பட்டுவிடுகிறது. சப்ளை ஒழுங்காக இருக்கிறது. பிறகு என்ன பிரச்சனை?
கேள்வி: சமீபகாலமாக பரவலாக விற்கப்பட்டுவரும் 4.5% கொழுப்புச் சத்தைக் கொண்ட பச்சைப் பாலை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்பைக் கொண்ட ஊதா நிறப் பாலை அதிகமாக விற்க வற்புறுத்துகிறீர்கள் என குற்றச்சாட்டு இருக்கிறது...
பதில்: எல்லாப் பாலிலும் ஏதோ ஒரு விதத்தில் எதையாவது சேர்க்க வேண்டியிருக்கிறது அல்லது நீக்க வேண்டியிருக்கிறது. பால் கொள்முதல் செய்யப்படும்போது, அதில் சராசரியாக 3.5% கொழுப்புச் சத்து இருக்கும்.
பிறகு அந்தப் பால், பண்ணைக்குக் கொண்டுவரப்பட்டு அதில் ஒரு சதவீதம் கொழுப்பு அதிகமாக சேர்க்கப்பட்டு, பாக்கெட் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஒருவர் எதுவும் சேர்க்காத பாலை விரும்புவார்களா, அல்லது கொழுப்பு சேர்த்த பாலை விரும்புவார்களா?
ஆகவே, ஒரே ஒரு தயாரிப்பில் மட்டும் பாலை வாங்கி, கொழுப்புச் சத்தை மாற்றாமல் விற்க முடிவுசெய்தோம். அந்த அளவு கொழுப்புச் சத்து போதும் என மருத்துவர்களும் சொன்னார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்போது அந்தப் பால் 3 லட்சம் லிட்டர் வரை விற்பனையாகிறது.
எங்களுடைய நோக்கம் விவசாயியிடம் பாலை வாங்கி, தரமாக நுகர்வோருக்கு அளிப்பதுதான். அந்தப் பாலின் விற்பனையை நாங்கள் ஊக்குவித்தால், அப்படிச் செய்யக்கூடாது என யார் சொல்ல முடியும்?
விலையை அதிகரித்திருப்பதாக அடுத்த குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இதே 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள வேறு நிறுவனங்களின் பால் லிட்டருக்கு 12 ரூபாய் முதல் 16 ரூபாய்வரை அதிகம். ஆகவே விலையை அதிகரித்ததாகச் சொல்வது பொய்.
கொழுப்பை எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எந்தக் கொழுப்பை எடுத்தோம்? எந்த அளவுக்கு கொழுப்புடன் பால் வருகிறதோ, அதே அளவுக்கு கொழுப்புடன் விற்கிறோம்.
ஆவின் நிறுவனம் வளர்வதைப் பொறுக்க முடியாமல் சிலர் அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.
குறைந்த கொழுப்புள்ள பாலை கூடுதல் விலைக்கு ஆவின் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
கேள்வி: புதிய தயாரிப்புகளை விற்பதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், ஏற்கனவே விற்றுக்கொண்டிருந்த பச்சைப் பாலை நிறுத்திவிட்டு, இந்தப் புதிய பாலின் விற்பனையை அதிகரிக்க வற்புறுத்துகிறீர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு..
பதில்: விற்பனையை நிறுத்தினோம் என்று சொல்வது தவறு. குறைக்க முயற்சி செய்தோம் என்பதை நான் தைரியமாகச் சொல்வேன். அந்தப் பால் தேவையில்லை என்று சொல்வேன். என்னுடைய வாடிக்கையாளருக்கு இது தேவை, இது தேவையில்லாதது என்று சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறதா இல்லையா?
நான் பாலை வாங்கி அப்படியே தருகிறேன். இது உடலுக்கு நல்லது என்று சொல்லும் உரிமை இருக்கிறதா இல்லையா?
தவிர, இதைவிட அதிக கொழுப்புள்ள பாலை விற்றுக்கொண்டிருக்கிறோமே... 6.5 சதவீத கொழுப்புள்ள பாலை ஆரஞ்சு வண்ணத்தில் கொடுக்கிறோமே.. கொழுப்பு மிக மிகக் குறைவான பாலையும் விற்கிறோமே.
தனியார் ஊடகத்துக்கு நன்றி.