ஒரு கோடி ரூபாயை தாண்டும் ஆடு விற்பனை!

B.Ramesh ananda raj,
ரம்ஜான் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் ஆடு விற்பனை ஒரு கோடி ரூபாயை கடந்தது.
மேற்படி பகுதியில் வியாழக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். ஆடு மற்றும் நாட்டு கோழிகளுக்கு பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.
அப்படியிருக்க நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை வருவதால், இன்று அய்யலூரில் நடந்த சந்தையில் ஆட்டு வியாபாரம் சக்கை போடு போட்டது.
அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். ஆடுகளையும், சேவல்களையும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இந்த சந்தையில் வெள்ளாடுகளைக் காட்டிலும், செம்மறி ஆடுகளே அதிக அளவில் விற்பனையானது.
பத்து கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
அதேபோல் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அந்த வகையில் இன்று அதிகாலை துவங்கி சுமார் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது.
மாலை இருட்டுவதற்குள் மேலும் சில கோடிகளை ஆட்டு வியாபாரம் எட்டுமாம்.