தூர் வாரலையோ தூரு! அதிகாரிகள் காண்டிராக்டர்கள் கட்டிங் டிஷ்யூம்! மூழ்க போகும் சென்னை பகுதிகள்!!

தூர் வாரலையோ தூரு! அதிகாரிகள் காண்டிராக்டர்கள் கட்டிங் டிஷ்யூம்! மூழ்க போகும் சென்னை பகுதிகள்!!

 ஜி.சாந்தகுமார்,

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் உள்ள மழைநீர்வடிகால் கால்வாய்களை ஈகோ காரணமாக தூர்வாராமல் வைத்திருப்பதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதாவது அதிகாரிகளுக்கும், காண்டிராக்டர்களுக்கும் இடையே கட்டிங் மேட்டரில் ஈகோவாம்.

இது பற்றின விவரம் வருமாறு,

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 2,071 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மழை நீர் வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் இதர கழிவுகளை தூர் வாரும் பணியை, நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாநகராட்சி துவங்கியது. அதன்படி, 23 நீர்நிலைகளில், 47.75 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதைத்தவிர, 1,356 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்களை தூர் வாரும் பணியை, மாநகராட்சி துவக்கியது.

   இதில், 972 கி.மீ., நீளமுள்ள கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன. இதில், திருவொற்றியூரில் 83 சதவீதம், மாதவரத்தில் 24 சதவீதம், தண்டையார்பேட்டையில் 33 சதவீதம், ராயபுரத்தில் 81 சதவீதம் தூர் வாரப்பட்டு உள்ளது. திரு.வி.க., நகரில் 83 சதவீதம், அம்பத்தூரில் 48 சதவீதம், அண்ணா நகரில் 66 சதவீதம், தேனாம்பேட்டையில் 82 சதவீதம், கோடம்பாக்கத்தில் 81 சதவீதம் தூர் வாரப்பட்டுள்ளது.

  வளசரவாக்கத்தில் 82 சதவீதம், ஆலந்தூரில் 67 சதவீதம், அடையாறில் 79 சதவீதம், பெருங்குடியில் 79 சதவீதம், சோழிங்கநல்லூரில் 97 சதவீதம் தூர் வாரும் பணிகள் முடிந்து உள்ளன.

   ஆனால், மணலி மண்டலத்தில் உள்ள 20 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால்களில், இதுவரை தூர் வாரப்படவில்லை. கடந்த 2021 நவம்பரில்  பெய்த கனமழையால், மணலி மண்டலத்தில் உள்ள மணலிபுதுநகர், மீஞ்சூர், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.

   அதனால், இந்தாண்டு முக்கியத்துவம் கொடுத்து தூர் வாரி, முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டிய மணலியில் கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இதுவரை தூர்ர் வாரும் பணி நடக்கவில்லை.

 மேலும், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை  துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மணலி மண்டலம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மழை நீர் வடிகால் பணி, மற்ற மண்டலங்களில் நடந்து வருகிறது. மணலி மண்டலத்தில் மட்டுமே, ஒப்பந்ததாரர் இதுவரை பணியை மேற்கொள்ளவில்லை. திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் உள்ள மழை நீர் வடிகால்களை தூர் வார, ஒரே ஒப்பந்ததாரருக்குத் தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

 இதில், திருவொற்றியூர் மண்டலத்தில் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ளன. மணலியில் பணிகள் துவங்காத நிலையில், மாதவரம் மண்டலத்திலும் குறைவான அளவில் தூர் வாரப்பட்டுள்ளது. எனவே மணலியில், மண்டல நிதியின் கீழ் தூர் வாரும் பணி, ஓரிரு நாளில் துவங்கும்.

 மணலியில், 22 தெருக்களில் 20 கி.மீ., நீளமுள்ள மழை நீர் வடிகால் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக தூர் வாரி முடிக்கப்படும் என்றார்.