முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் அடைப்பு!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3.10 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் 6 மணி நேர விசாரணைக்கு பின்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வரும் 20ஆம் தேதி வரை திருச்சி மத்தியில் சிறையில் அடைத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது கைது நடவடிக்கையில் இத்தனை அவசரம் காட்ட வேண்டியது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.
`முன்ஜாமீன் மனுவை நாங்கள்தான் ஜனவரி 6ஆம் தேதி எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஆனால், ஒருநாள் அவகாசம் இருக்கும்போது ஒரு நாள் முன்னதாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3.10 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனுவை விசாரித்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அதே பாணியில் ஏமாற்றியதாக ஒன்பது புகார்கள் ராஜேந்திர பாலாஜி மீது அளிக்கப்பட்டன.
இதனால், காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் என்பதை அறிந்த ராஜேந்திர பாலாஜி எஸ்கேப் ஆனார். இதையடுத்து, எட்டு தனிப்படைகளை அமைத்து டெல்லி, கர்நாடகா, கேரளா எனப் பல மாநிலங்களில் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். சுமார் 18 நாள்களாக இந்தத் தேடுதல் வேட்டை நீடித்தது.
இதுதொடர்பாக, ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் எனப் பலரையும் போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால், எங்கு தேடியும் ராஜேந்திர பாலாஜி சிக்கவில்லை.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பின்தொடர்ந்து சென்று போலிஸார் நேற்று கைது செய்தனர்.
அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க பிரமுகர் ராமகிருஷ்ணன், நாகேஷ், ரமேஷ் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலத்துக்கு அழைத்து வந்தனர்.
ஆவின் மோசடி வழக்கில் சுமார் 3 மணி நேரம் வரையில் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, 20 ஆம் தேதி வரையில் ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
என்னமா பேசினாரு....?