பிரபல ரவுடி ஜானியின் மனைவி - வழக்கறிஞர் ஷாலினி கைது!

பிரபல ரவுடி ஜானியின் மனைவி - வழக்கறிஞர் ஷாலினி கைது!

உ.சசிக்குமார்,

 பிரபல ரவுடியும், தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவருமான ஜானியின் மனைவி ஷாலினி. இவர் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

 இந்நிலையில் வேலூர், தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய ஜெயிலில் காட்பாடி பகுதியை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக அவரை  சந்திக்க ஷாலினி கடந்த 3-ந் தேதி சென்றார்.

 அப்போது ஷாலினி அடையாள அட்டை ஒன்றை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்தார்.

 அதனை ஜெயில் அதிகாரிகள் சோதனை செய்ததில், அடையாள அட்டை வேறு நபரின் பெயரில் இருந்ததாக  கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  இந்நிலையில் வழக்கறிஞர் ஷாலினி மீது பாகாயம் காவல் நிலையத்தில் ஜெயிலர் மோகன் என்பவர் புகார் அளித்ததன் பேரில் நேற்று ஷாலினியை பாகாயம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாபுரவிச்சந்திரன் தலைமையிலான பெண் போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 இது குறித்து போலிஸ் தரப்பில் கூறியதாவது,

  ஷாலினி கொடுத்த வழக்கறிஞருக்கான அடையாள அட்டையினால் ஜெயில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அவரை பற்றி விசாரித்தனர்.அவர் ரவுடி ஜானியின் மனைவி ஷாலினி என்பதும், கணவரின் கூட்டாளியான சீனிவாசனை போலி வக்கீல் அடையாள அட்டையை கொடுத்து சந்திக்க முயன்றதும் தெரிய வந்தது.

  அதையடுத்து அவர் கைதி சீனிவாசனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த ஷாலினி சிறை காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

  இது குறித்து ஜெயிலர் மோகன் வேலூர் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷாலினி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தோம்.

  ஷாலினி மீது மோசடி மற்றும் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் கீழ் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை பெண்கள் சிறையில் அடைத்தோம் என்றனர்.

  இது குறித்து வழக்கறிஞர் ஷாலினியின் தாய் நிர்மாலா கூறுகையில், என் மகள் ஷாலினி ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஆர்.கே.எம். சட்ட கல்லூரியில் வழக்கறிஞருக்கு படித்தார். பின்னர் டெல்லியில் என்ட்ரோல் செய்துள்ளார். அவர் ஜெயிலில் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தவில்லை. அதிகாரிகள் யாரையும் மிரட்டவும் இல்லை.

   என் மருமகனின் மீதுள்ள கோபம் காரணமாக மகள் ஷாலினியை பழி வாங்கியிருக்கிறார்கள். அவரை சத்துவாச்சாரியில், நீதிமன்ற வளகத்துக்கு அருகே தான் கைது செய்தனர். அப்போது என் மகள் வழக்கறிஞர் சிறுடையில் பணியில் இருந்தார். மேலும் ஷாலினியை வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கைது செய்தத்தை போல் போலிசார் பொய்யாக வழக்கு போட்டுள்ளதாக சிலர் சொன்னார்கள்.

  உண்மையில், எங்கு கைது செய்தனர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த வழக்கை சட்டபடி சந்தித்து நிரபராதி என்பதை நிரூபிப்போம் என்றார்.