நகராட்சி மேற்பார்வையார் வெட்டி கொலை!

எஸ்.செல்வராஜ்,
தென்காசி மாவட்டம், செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. தென்காசி யூனியன் முன்னாள் தலைவரான இவர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.இவர்களுடைய மகன் ராஜேஷ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வை ஊழியராக பணியாற்றி வந்தார். ராஜேஷ் நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் காலை 10.45 மணியளவில் அங்கிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக ராஜேஷ் அதன் மீது அமர்ந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று ராஜேஷை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மோட்டார் சைக்கிளில் அமர்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
சாலை மறியல் நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த படுகொலை பற்றி தகவல் அறிந்து திரண்ட ராஜேஷை கொன்றவர்களைகைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், நெல்லை மாவட்டம் அம்பையில் வாகன சோதனை நடத்தியபோது 2 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள், நெல்லையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மந்திரமூர்த்தி,, நாங்குநேரியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரி என்பதும், ராஜேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரணம் என்ன? கைதான மந்திரமூர்த்தி, மாரி ஆகிய 2 பேரும் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, ரெயிலில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளனர். அண்மையில் இருவரும் அங்குள்ள பஜாருக்கு சென்றபோது ராஜேசுடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றபோதும், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதனால் ஆத்திரத்தில் ராஜேஷை கொலை செய்ததாக மந்திரமூர்த்தி, மாரி ஆகியோர் கூறியதாக போலீசார் சொல்கிறார்கள்.