செந்தில் பாலாஜி ரிமாண்டை நீக்கக்கோரிய மனு கோர்ட்டில் தள்ளுபடி! அமைச்சர் பதவி மாற்றமா!

செந்தில் பாலாஜி ரிமாண்டை நீக்கக்கோரிய மனு கோர்ட்டில் தள்ளுபடி! அமைச்சர் பதவி மாற்றமா!

ம.பா.கெஜராஜ்,

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

 சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வந்து செந்தில் பாலாஜியிடம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து அவரை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

 உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

 இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலை நீக்கக்கோரிய மனு ஏற்கத்தக்கதல்ல என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

 அப்படியிருக்க முன்னதாகஅவர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் சிகிச்சைகள் மற்றும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.

 அதில் "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி வயது 47, அவர்களுக்கு இருதய ரத்த நாள பரிசோதனை 14-06-2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கிய இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது" என்று ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 ஆனாலும்  செந்தில் பாலாஜியின் பரிசோதனை முடிவுகளை அமலாக்கத்துறை எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு அனுப்பி அவர்களது கருத்தை கேட்பதாக தெரிகிறது.

   பாதுகாப்பை ஏற்ற புழல் சிறை அதிகாரிகள்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு புழல் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆகவே துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

 மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை

 அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ் தலைவர்):-தமிழ்நாடு மின்சாரத்துறை மந்திரி செந்தில்பாலாஜியை பின்னிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. இது மோடி அரசு, தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மேற்கொள்கிற அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை அன்றி வேறில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் யாரும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் பயந்து விட மாட்டோம்.

அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித்தலைவர்):- சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறை இயக்குனரகமும் பா.ஜ.க.வின் ராணுவம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

 தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தியதற்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அவர் கைது செய்யப்பட்ட விதம், கடும் ஆட்சேபத்துக்கு உரியது. அமலாக்கத்துறை இயக்குனரகமும், சி.பி.ஐ.யும் ஊழல்வாதிகள் பின்னால் இனி செல்லப்போவதில்லை. அனைத்து ஊழல்வாதிகளும் பா.ஜ.க.வில் அடைக்கலம் ஆகிறார்கள்.

  டி.ராஜா (இந்திய கம்யூ. பொதுச்செயலாளர்):- தலைமைச்செயலகத்துக்குள் அமலாக்கத்துறை இயக்குனரகம் செல்ல முடியும் என்பது கடும் ஆட்சேபத்துக்கு உரியது. இப்படிச் செய்வதின் மூலம் பா.ஜ.க. தமிழ்நாட்டில் வெற்றி பெறலாம் என நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.

  பா.ஜ.க.வை தமிழ்நாடு அனுமதிக்காது.

உமர் அப்துல்லா (தேசிய மாநாடு கட்சித்தலைவர்):- தமிழ்நாட்டில் அமைச்சரிடம் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அவருக்கு இதயத்தில் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளது, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 மத்திய அரசும், இந்த புலனாய்வு அமைப்புகளும் தங்கள் நடத்தை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டும்.

 நஜ்மஸ் சாகிப்  (மக்கள் ஜனநாயகக்கட்சி செய்தி தொடர்பாளர்):- மத்திய புலனாய்வு அமைப்புகள் முதலில் காஷ்மீரில் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அமலாக்கத்துறை சோதனை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மராட்டியம், கர்நாடகத்திலும் நடக்கிறது. மத்திய அரசு தனது நிறுவனங்களுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என வரிசை கட்டியிருக்கிறார்கள்.

  அமைச்சர் பதவி மாற்றமா?

 இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

 இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி வசம் உள்ள துறைகளை சீனியர் அமைச்சர்கள் ஓரிருவரிடம்  கொடுக்க திட்டமிட்டுவருவதாக சொல்கிறார்கள் ஆகவே அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.