ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபி - 3 ஆண்டுகள் சிறை தண்டனை! ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!

உ.சசிக்குமார்,
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சட்டம் - ஒழுங்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தண்டனை இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது குற்றவாளி ராஜேஷ் தாஸ்க்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய ஏதுவாக வரும் 17-ம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 நாள் கெடுவுக்குள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விவரம்:- கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதையை டிஜிபி திரிபாதிக்கு புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த புகாரின் அடிப்படியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாலியல் குற்றவாளி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா வின் கணவராவார்.