கடை உண்டு! இல்லை??அடிதடி பரபரப்பு!

ஜி.கே.குலசேகரன்,
வாணியம்பாடியில் கடையடைப்பு குறித்து துண்டுப்பிரசுரம் வழங்கிய போது இரு வணிகர் சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
வணிகர் சங்க பேரமைப்பு - விக்கிரமராஜா பிரிவு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் திருச்சியில் நாளை மறுதினம் நடைபெறும் மாநாட்டிற்காக நிர்வாகிகள் சிலர் திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வணிகர்களை கடைகளை அடைத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வந்துள்ளனர்.
அப்போது நியூடவுன் பகுதியில் உள்ள கடைகளுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி கொண்டிருந்தபோது மற்றொரு சங்க நிர்வாகிகள் சிலர் (வணிகர் சங்கங்களின் பேரவை - வெள்ளையன் பிரிவு) ,என்ற சங்கம் வாணியம்பாடி பகுதியில் இல்லை எனவும், நாளை மறுதினம் கடையடைப்பு இல்லை என வணிகர்களிடையே அவர்களும், துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருசங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது
சட்டையை கிழித்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் ,அருண், அனந்தராமன், பத்மநாபன் ஆகிய நான்கு பேரும் வணிகர் சங்கங்களின் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் இரண்டு பேர் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இரு சங்கங்களின் நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் கூட்டம் கூடியதால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட இருதரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இச்சம்பவம் தொடர்பாக தவறான கருத்தை வணிகர்களிடையே பரப்பி பிரச்சனையில் ஈடுப்பட்டு தாக்கிய வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளையும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் வாணியம்பாடி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.