மீண்டும் கள்ளச்சாராய சாவு!

த.நெல்சன்,
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி, மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து மேலும் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த 65 ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் காலை 10 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.