அதிகாரிகளை முடுக்கிவிட்ட ஆட்சியர் சாருஸ்ரீ!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நன்னிலம் வட்டம், பனங்குடி மேலவாசல் பகுதியில் தூய்மை பாரதம் இயக்கத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் தனிநபர் கழிவறையினையும், முடிகொண்டான் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையத்தினையும், தெற்கு அக்ரஹாரம் பகுதியில் கட்டப்பட்டுவரும் தனிநபர் கழிவறையினையும், அகரதிருமாளம் ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுது நீக்கப்பணிகள் நடைபெற்றுவருவதையும், பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறையினையும், மாணவர்களின் கழிவறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பூந்தோட்டம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு வெளிநோயாளிகள் பகுதி, மருந்தக பகுதி, ஆய்வகம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுவரும் மருத்துவமனைக் கட்டடத்தினையும், குவளைக்கால் ஊராட்சியில் அங்கான்வாடி மையம் கட்டப்படவுள்ள இடத்தினையும், புதியதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினையும் மற்றும் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக்கடையினையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்ட பின்னர் பணிகளை விரைந்து முடிந்திட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இவ் ஆய்வில், நன்னிலம் வட்டாட்சியர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.