சஸ்தாவாக கிடைக்கும் மான்கறி! வாங்க போனவர் கைது!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையத்தில் புள்ளிமானை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஆறு பேர் வனத்துறை அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடினர். மான் இறைச்சியை விலைக்கு வாங்க சென்ற இளைஞரை கைது செய்த வனத்துறையினர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ மான் மாமிசம் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பெயரில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக அறியப்பட்ட மேல ஆவாரம்பட்டி பகுதியில் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வனவர் இளவரசன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது வீட்டில் வைத்து மான் மாமிசம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. வனத்துறையினர் ரோந்துக்கு வந்த தகவலை அறிந்த மாடசாமி மற்றும் கூட்டாளிகளான வடிவேல், அகிலேஷ் குமார் உள்ளிட்ட ஆறு பேர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அப்போது மான் மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்ற 21 வயது இளைஞர் வந்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ மான் இறைச்சி, வேட்டையாட பயன்படுத்தப்பட்ட அறிவாள், கத்தி, அரிவாள் மனை, உள்ளிட்ட ஆயுதங்களையும், மாமிசத்தை எடை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
காளிராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தப்பி ஓடியவர்கள் வாழைகுளம் பீட் பகுதியில் இரவில் சட்டவிரோதமாக மான்களை தொடர்ந்து வேட்டையாடி, பகலில் மாமிசத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காளிராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர் தப்பி ஓடிய ஆறு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் சட்ட விரோதமாக மான் வேட்டையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வேட்டை நடப்பதாக சந்தேகப்படும் பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் சொன்னார்கள்.