எங்களுக்கே தண்ணி காட்டுறீங்களா? நிதிஷ் குமார் கட்சியில் பிளவு ஏற்படுத்த பாஜக திட்டம்!

எங்களுக்கே தண்ணி காட்டுறீங்களா? நிதிஷ் குமார் கட்சியில் பிளவு ஏற்படுத்த பாஜக திட்டம்!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

மகாராஷ்டிர மாநில அரசியலை உருகுலைக்கும் செயல்பட்டு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இரண்டாக உடைத்த பா.ஜ.க தற்போது பீகார் மாநிலம் பக்கம் தன் ஜாகையை மாற்றவிருக்கிறது.

  பாஜக பல்வேறு மாநிலங்களில் கால் பதித்து வருகிறது.  அந்த வகையில் பல்வேறு கட்சிகளின்சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செல்வாக்கு உள்ள நபர்கள் என பலதரப்பட்டவர்களை இழுத்து போட்டு வருகிறது.  

  போதாகுறைக்கு மாநிலங்களில் பலமாக இருக்கும் கட்சிகளை இரண்டாக, மூன்றாக உடைக்கும் வேலைகளில் கூட பாஜக ஈடுபட்டு வருகிறது.

   மகாராஷ்டிராவை போல் பீகாரிலும் பாஜகவுக்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

   பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் துணையுடன் ஆட்சி நடத்தி வருகிறார் நிதீஷ் குமார்.

   இதனால் மகாராஷ்டிராவை தொடர்ந்து பீகார் அரசியலிலும் திருப்பங்களை நிகழ்த்த பாஜக தயாராகிவருகிறது. பீகாரில் 40 எம்பி தொகுதிகள் உள்ளனர். இங்கு எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி விட்டால் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பாஜக கணக்குபோட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

  பீகாரில் நிதிஷ்கட்சியை உடைப்பதை பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்பியுமான சுஷில்குமார் மோடி நேற்று உறுதிப்படுத்தினார்.

   இதுபற்றி அவர், “நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இப்போது கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் உள்ள பலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து எங்களுடன் வருவார்கள்.

 அவர்கள் அனைவரும் நிதிஷ்குமாரின் வாரிசாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவரும், துணைமுதல்வருமான தேஜஸ்வியை ஏற்கவில்லை. மேலும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல்காந்தியை ஏற்கவில்லை. மகாராஷ்டிரா போன்று பீகாரிலும் அரசியல் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்றால், வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம். நிதிஷ்கட்சியில் எதுவும் நடக்காது என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று கொளுத்தி போட்டிருக்கிறார்.

 பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் நிதீஷ்குமார் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கே ஆப்பு சீவப்பட்டிருப்பதாக தெரிகிறது.