கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தாக்கப்பட்டனர்! போராட்டத்தில் குதிக்கும் கம்யூ கட்சிகள்!

ஜி.கே.சேகரன்,
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயம், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லபள்ளி ஊராட்சி பகுதியில் கல் குவாரிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு அதே ஊராட்சி பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். ஆனால் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கல்குவாரி அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மல்லப் பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா,அருண்குமார் சென்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த மற்றொரு தரப்பினர் இளையராஜா மற்றும் அருண்குமார் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா.¢ இதை குறித்து நாற்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளையராஜா கூறுகையில், கல்குவாரி அமைந்தால் வீடுகளுக்கு பாதிப்பு சுற்றுசூழல் மாசு படும் எனவே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் ஊர் இரண்டாக பிரிந்துள்ளது.
எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டபடியானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்
இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க செயலாளர் முல்லை கூறுகையில் கல்குவாரி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் அங்கு கல்குவாரி அமைக்க கூடாது இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என கூறினார்.