நகை கொள்ளையில் அரசியல்!

ம.பா.கெஜராஜ்,
செருப்பை வைத்து பா.ஜ.க அரசியல் நடத்த முயல, மறுபக்கமோ நகை கொள்ளையை வைத்து இங்கு அரசியல் பேசப்பட்டு வருகிறது.
சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், 'பெடரல்' வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, 13ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் புகுந்து, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை, கொள்ளை அடித்து சென்றனர்.
சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு இ.கா.ப., தலைமையிலான, தனிப்படையினர், அதே வங்கியின் ஊழியரும், முக்கிய குற்றவாளியுமான, வில்லிவாக்கம் முருகன், 37, மற்றும் அவரது கூட்டாளிகள் பாலாஜி, 28, சந்தோஷ், 30, செந்தில்குமார், 30, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 8.5 கோடி ரூபாய் மதிப்பில், 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டர். அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து, 10 கிலோ நகைகளை மீட்டனர்.
மேலும், சூர்யா, கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சா, 42, என்பவரிடம் நகையை விற்க முயன்றுள்ளார். இதனால், இவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரிடம் முருகன் அளித்துள்ள வாக்குமூலத்தில், சினிமா படங்களை தயாரிக்க வேண்டும்; அதில் நானும் என் கூட்டாளிகளும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.. வங்கியில் வேலை பார்த்ததால் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் நகைகளை பார்த்ததும், கொள்ளையடிக்கும் ஆசை வந்து விட்டது.
அது பற்றி, என்னுடன் தினமும் உடற்பயிற்சி செய்யும் பள்ளி நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். கொள்ளை குறித்த சினிமா படங்களை பார்த்தோம். ஜென்டில்மேன் படத்தில், அர்ஜுன் கொள்ளையடிப்பது போல செய்ய முடிவு செய்தோம். கொள்ளையடித்த வங்கியின் எச்சரிக்கை அலாரத்தின் கட்டுப்பாட்டு மையம், புதுடில்லியில் உள்ளது.
அதை இணையதளம் உதவியுடன் அதை துண்டித்தேன். வங்கி லாக்கரின் சாவிகள், வங்கியில் தான் இருந்தன. அதனால், 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பினோம். நகைளை பிரித்துக் கொண்டோம். போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவர். இதனால், நகை விற்ற பணத்தில், மற்றவர்கள் என்னை ஜாமினில் எடுக்க வேண்டும். யார் பிடிபட்டாலும், அவர்களை மற்றவர்கள் ஜாமினில் எடுக்க வேண்டும் என பேசி திட்டம் தீட்டியிருந்தோம் என்று கூறியுள்ளார்.
இப்படி போலிசார் விரைந்து செயல்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் கொள்ளை போவது அதிகரித்துவிட்டது என்று அ.தி.மு.க.பக்கமிருந்து குரல் எழும்பியது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, கொள்ளை போனாலும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துவிட்டோம், ஆனால் உங்க ஆட்சியில் உங்க அம்மா பங்களாவில் (கோட நாடு) நடந்த கொலை கொள்ளையை கண்டுபிடிக்க உங்களுக்கு யோக்யதை இல்லை என்று காரசாரமாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆக இதிலும் அரசியல் செய்ய அதிமுக துடிக்கிறது