நீரிழிவு நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு தாய்பால் அவசியம்! வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில் ஆரோக்கியமான குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தைகளின் தூய்மைக்கான பரிசு தொகுப்புகளையும், விழாவையொட்டி தாய்ப்பால் அவசியம் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவற்களுக்கு சான்றிதழ்களையும் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.
ஆண்டு தோறும் ஆகஸ்டு 1 முதல் 7-ஆம் தேதி வரை தாய்ப்பால் அவசியம் பற்றிய வார விழா உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி பல்வேறு நிகழ்வுகளுடன் வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஒரு வார காலம் நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் சோனியா மேரி குரியன் வரவேற்று பேசினார்.
குழந்தைகளுக்கு தாய் பாலின் அவசியம் பற்றி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ஜெயசீலா காமராஜ் விளக்கி கூறினார். மருத்துவமனை மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் திலீப் மத்தாய், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் ஆகியோர் பங்கேற்று தாய்ப்பால் வழங்குவதின் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குவதுடன் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதை தடுக்கவும், குழந்தைகளுக்கு புற்று நோய், நீரிழிவு நோய், வயிற்றுப்போக்கு, நெஞ்சு சளி உள்ளிட்டவைகளின் தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் வழங்குவதின் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் என்று தெரிவித்தனர்.
நிகழ்வில் மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.