ரவுடிகளின் கூடாரமாகும் அரக்கோணம்!! குற்ற பின்னணி நபர் வெட்டிக்கொலை!

U.சசிகுமார்
முன்விரோத தகராறில் சென்னை ஆழ்வார்பேட்டை ரவுடி¢ அரக்கோணத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டை சேர்ந்தவர் பிராங்க்ளின் (25 ). இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏபிஎம் சர்ச் பகுதியில் உள்ள தனது பெரியம்மா காயத்ரி வீட்டில் தங்கி இருந்தார்.
ஆடிமாதத்தை முன்னிட்டு அரக்கோணம் சானத்தம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்டு ஊர் மக்கள் பரபரப்பாக இருந்தனர். அப்போது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மறைவான இடத்தில் பிராங்கிளின் நின்றிருந்தார். அப்போது ங்கு வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிராங்கிளின் இறந்தார்.
அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் இருவர் பிடிபட்டதாகவும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலிசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அரக்கோணம் சென்னைக்கு வெகு அருகில் இருப்பதாலும், ரயில் போக்குவரத்து மிகவும் சுலபமாக இருப்பதாலும் சென்னையில் பெரும் குற்றம் புரியும் நபர்கள் பலர் இங்கு தலைமறைவாக பதுங்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.